Tuesday, May 13, 2008

வியர்வைத் துளிகள்

விடியலின்
ஈர விதைகள்

கனவுப் படகுகளை
யதார்த்தக் கரை
சேர்க்கும் நதிகள்

முயற்சிக்கும்
முன்னேற்றத்திற்கும்
இடையே உள்ள தூரம்

வாழ்க்கை என்னும்
கவிதை எழுத
மெய்
தன்னிலிருந்தே
தயாரிக்கும்
மை

உழைப்பு உளி
உடம்பைச் செதுக்கும் போது
சிதறும் சில்லுகள்

வசந்தப் புரட்சியை
வரவழைக்க
உதித்த
ஒரே புள்ளி கொண்ட
ஆய்த எழுத்துகள்

உடம்பு வில்
உழைப்பில் வளையும் போது
சோம்பலைக் கொல்லும்
அம்புகளைத்
தானே
தயாரித்துக் கொள்கிறது

உயிரின் முடக்கத்துக்கு
உடம்பு இடும்
முற்றுப் புள்ளிகள்

உழைப்புச் சூட்டில்
உடம்பு உலை
உற்பத்தி செய்யும்
நீர்த் துளிகள்

பேனா(இன்னும்))

வெள்ளை முட்பரப்பில்
தலையால் நடந்து
மூளையைப் பிழிகிறேன்
அப்பிழிவில் தெரியும்
துடிக்கும் என் இருதய ஈரம்

உலர்ந்தும்
உலராத உயிர்மை
என் உயிர் மை

மை பாய்ந்த காகிதக் கூடும்
என் மெய்
உயிர் மை உறையும் உயர்மெய்
உயிர்மெய்

ஒரு மையின் உண்மையே
கூடுகளனைத்திலும்
ஒரு மெய்யின் உள் மை
உள் மெய்

ஒருமையை உண்
உண் இம்மை
உண் இம்மெய்

உண் மை
உண்மையை உண்ண உண்ண
உன் மெய் விளங்கும்
உன் மை உயிர்மையை
என் மை கசியும்

வெண்மையில் கருமையால்
விழி பிறக்கத் தெரியும்
மெய்ப்பொருள் விளக்கம்

பேனா

உன் இரத்தம்
எம் மொழிகளின்
நாவு

உன் கண்ணீர்
எம் எண்ணங்களின்
வரி வடிவம்

காகிதப் பாதையில்
நீ
நடக்கும் போது
சிந்தும் வியர்வைத் துளிகளே
எம் இலக்கிய விதைகள்

எப்போதும்
எச்சிலைத்
துப்பிக் கொண்டிருக்கும்
உன் அநாகரிகம் தான்
எம் நாகரிகத்தின்
முகவரி

நீ
எம் நெற்றிக் கண்களின்
இமைகளைக் கிள்ளியெறிந்த
ஆறாவது விரல்

காகிதச் சிலுவையில்
எம் எண்ணங்களின்
சிலுவைப்பாட்டை
நீ
வழங்காவிட்டால்
எமக்கு
உயிர்த்தெழல்கள்
இல்லாமலே போய்விடும்

உன் தலை கவிழ்தலில் தான்
மானுடராம்
எம் தலை நிமிர்தல்கள்
நிச்சயிக்கப்படுகின்றன

ஏட்டுப் பாறையில்
உன் தலையால் முட்டி
நீ
செதுக்கும்
தலையெழுத்துக்கள் தாம்
எம் எதிர்காலத் தலையெழுத்தை
நிர்ணயிக்கின்றன

கைக் கூண்டிலிருந்த
விரல்கட்குச்
சிறகாக
நீ
முளைத்த போது
அவை காகித வானில்
பறந்து விட்டுச் சென்ற
சுவடுகள் தாம்
எம் எழுத்துக்கள்

உன் பாதைகள்
எம் இலட்சியங்களை
முடிவு செய்கின்றன

உன் சுவடுகள்
எம் பாதங்களுக்குப்
பாதைகளைத்
தெரிவு செய்கின்றன

உன் குருதித் துளிகள்
எம் நிஜ முகங்களைப்
பிரதிபலித்து விடுகின்றன

விரல்களின் தூக்கில்
தொங்கும் போது
நீ
உயிர்க்கிறாய்

உன் கழுத்தைச் சுற்றி
மனித விரல்களையே
அணிந்த போதையில் தான்
தலை கால் தெரியாமல்
நீ
தலையால் நடக்கிறாயா!

ஆறாவது அறிவு
மனிதனுக்கு வாய்த்த போது
நீ
ஆறாவது விரலாக
முளைத்து விட்டாயா!

விரல்கள்
என்ற ஓரறிவு உயிரிகள்
ஈரறிவு உயிரிகளாய்ப்
பரிணமிக்க
உன்னைத்
தம் நாவாக
வளர்த்துக் கொண்டனவா!

Monday, May 12, 2008

அடி முடி அளத்தல்

பூமி பெரிது தான்
மிக மிகப் பெரிது
நீயோ சிறு விதை தான்
மிக மிகச் சிறிது
வீரிய முளை விடும்
சீரிய முனைப்போடு
மேலெழு
மிகப் பெரிய பூமியும்
பிளந்து
உன் தாளடியில்
அடங்கி விடும்

வானம் பெரிது தான்
மிக மிகப் பெரிது
உன் சிறகுகள் சிறியன தாம்
மிக மிகச் சிறியன
சிறகு விரி
பற
விசுவரூப வானம்
வாமனன்
உன் உடம்பில்
ஒடுங்கி விடும்

காணாமல் கண்டதை...

அதிகாலையில்
தூரத்தில்
சிரிக்கும் செவ்வரளிப் பூக்களை
விழிகள் கேட்டு மகிழும்

அருகே
பாதையில்
உதிர்ந்து கிடக்கும்
பாரிஜாத மலர்களை
விழிகள் ஒவ்வொன்றாய்ப் பொறுக்கும்

காற்றில் மணக்கும்
பட்டாம்பூச்சிகளை
விழிகள் நுகர்ந்து கிறங்கும்

பசிய புல்வெளியில்
பரிமாறப் பட்டிருக்கும்
பனித்துளிகளை
விழிகள் நக்கிச் சுவைக்கும்

கேட்டும்
தொட்டும்
நுகர்ந்தும்
சுவைத்தும்
போதையேறிய விழிகள்
பார்க்க மறக்கும்

காணாமல் கண்டதைக்
கவிதையாய்ப் பேச
விரல்களிலிருந்து
நாவு நீளும்

Sunday, May 11, 2008

சங்கமம்

காத்திருக்கிறேன்.
மனக் குளத்தில்
வார்த்தைக் கற்களாக விழுந்து
பொழுது கழிகிறது.
ஒன்று
இரண்டு
மூன்று
..........
..........
..........
..........
ஆ...
கவிதைக் காதலி
எழுந்து வருகிறாள்
அலைபாயும் குளத்திலிருந்து
என்னை நோக்கி
ஈரம் சொட்டச் சொட்ட

வார்த்தைக் கற்கள் தீர்ந்துவிடப்
பொழுதும் நின்றுவிட
வளியிடைப் போகா முயக்கில்
எம் சங்கமம் நிகழ்கிறது

சிகர உச்சியிலிருந்து
உருண்டு விழுகின்றன
வார்த்தைக் கற்கள்
நின்றுவிட்ட பொழுதை
நகர்த்தி

புற்களின் விளையாட்டு

கண்ணுக்குத் தெரியாத நூலால்
தும்பிகளைப் பறக்கவிட்டு
விளையாடும் புற்கள்

காற்று

இலைகளை உடுத்தி
இன்னும் நிர்வாணமாகும்
காற்று

பட்டாம்பூச்சியை
உடுத்திப் பறக்கிறது
காற்று

இலைகளை அசைத்தசைத்துக்
கண் சிமிட்டும்
காற்று

நன்னம்பிக்கை முனை

எல்லாக் கீற்றுகளும்
உலர்ந்து போய்த்
தாழ்ந்து கிடக்கின்றன.
எழுந்து நிற்கும் சக்தி
மொத்தாமாய்ச் செத்து
எக்கணமும்
கழன்று விழக்
காத்திருக்கின்றன

தென்னை மரம் என்னவோ
இன்னும்
நம்பிக்கையோடு தான்
உயர்ந்து நிற்கிறது

தினமும்
பல முறை
பார்த்து வருகிறேன்
தென்னையில்
என்னை

உயிர் போகும்
கேள்வியோடு
இன்னும்
உயிரோடு

கருங்காக்கையொன்று
அமர்கிறது
தென்னையில்

நன்னம்பிக்கை முனையொன்று
முளைக்கிறது
என்னில்

Friday, May 9, 2008

ஆழ்ந்த மௌனம்

ஆழ்ந்த மௌனத்தை
நான்
இன்னும் கற்கவில்லை

என் வேர்களை
இறுகப் பிடித்து
என்னைத் தாங்கும்
ஆழ்ந்த மௌனத்தின் மீது
சருகுகளாய்
மலர்களாய்
உதிர்ந்து விழுகின்றன
அஞ்ஞான வார்த்தைகள்

மாறாத
இலையுதிர் கால
மெய்ஞ்ஞானம் வாய்க்க
ஆழ்ந்த மௌனத்தை
நான்
இன்னும் கற்கவில்லை

விழுவனவற்றின்
இடைவெளிகளில்
எட்டிப் பார்க்கும்
அழிக்க முடியாத
ஆழ்ந்த மௌனத்தின்
அர்த்தகனத்தை
அறியாமல்
விழுவனவற்றின்
அறுக்க வேண்டிய
மாய வலைக்குள்
சிக்கியவனாய்
நான்

பழையன களைந்து
புதியன உடுத்தி
புதியன பழையனவாக
மீண்டும்
பழையன களைந்து
புதியன உடுத்தி
மீண்டும்
மீண்டும்
களைதலும்
உடுத்தலும்
பழகிய
அஞ்ஞானச் சுழற்சியுள்
நான்

களைய ஏதுமற்ற
உடுத்த விருப்புமற்ற
என் நிர்வாணம்
ஆழ்ந்த மௌனத்தின்
அடி முடி அளந்தும்
அடங்கிக் கிடக்க
ஞானியென்ற மமதையில்
ஒவ்வொரு கணமும்
விதவிதமாய்
உடுத்தி நிற்கும்
நான்

ஆழ்ந்த மௌனத்தை
நான்
இன்னும் கற்கவில்லை
என்றாலும்
என் அஞ்ஞான வார்த்தைகளின்
இடைவெளிகளில்
அதன் மெய்ஞ்ஞானத்தை
உங்களால்
உணர முடியும்
ஆழ்ந்த மௌனத்தின்
அடி முடி அளந்து
அடங்கிக் கிடக்கும்
உம் நிர்வாணத்தையும்
தரிசிக்க முடியும்

உம் நிர்வாணத்தைத்
தரிசித்த பின்
எந்த வார்த்தைகளும்
உமக்குப்
பிடிக்காமல் போகும்

நிலையாத வசந்தத்தில்
சித்தார்த்தர்களாய் நிற்கும்
நீவிர்
மாறாத இலையுதிர் காலத்தில்
புத்தர்களானால்
என் அஞ்ஞான வார்த்தைகளும்
அர்த்தப்படும்

Thursday, May 8, 2008

தேசியக் கொடி

வாழும் பூமியின்
தேசியக் கொடி
மரம்

Wednesday, May 7, 2008

தழுவல்

நீ எவ்வளவு தூரத்திலிருந்தாலும்
என்னைத் தழுவாமலா போகும்
உன் மீது வீசிய காற்று!

போதி மரம்

காயம் பொய்யென்றான்
கனியால் குட்டியது
மரம்

செதுக்கல்

கல்லுக்கும் சிலைக்கும் இடையே
உளியின் கூப்பிடு தூரத்தில்
சிற்பியின் கனவு

கல் மட்டுமல்ல
செதுக்கப்படுவது
சிற்பியுந்தான்

உடம்பெங்கும் இரணங்களோடு
உயிர்த்தது கல்
சிலையாக

சிற்பியின் பிரசவ வேதனை
உளி வழியே கல்லில் பரவப்
பிறந்தது சிலை

இளநீர்

மண்ணடி நீரை
மரக் குழாய் நீட்டி உறிஞ்சுகிறது
தேங்காய்

நிலவையும் உடைக்கலாம்

நிலத்தின் மீதிருந்தே
நிலவையும் உடைக்கலாம்
குளத்தில் கல்லெறி

புல்நுனி மேல் பனித்துளி

பூமியில் ஊன்றி நில்
வானம் வசப்படும்
பார்...புல்நுனி மேல் பனித்துளி!

இரவின் மரணத்துக்கு
நட்சத்திரங்கள் சிந்திய கண்ணீரா
புல்நுனி மேல் பனித்துளி!

இரவில் விண்ணும் மண்ணும் புணர்ந்ததைக்
காட்டிக் கொடுக்கிறதே
புல்நுனி மேல் பனித்துளி!

திருடிச் சென்றான் சூரியன்
மண்ணில் விளைந்த முத்தை
புல்நுனி மேல் பனித்துளி!

இரவுப் பறவை
இட்டுச் சென்ற எச்சமா
புல்நுனி மேல் பனித்துளி!

இரவு பூசிய கருமையிலிருந்து
புல் செய்த அதிசய வெண்துகளோ
பனித்துளி!

கையில் நீர்ப்பந்தத்தோடு
விடியலில் விண்ணைத் துழாவுதோ மண்
புல்நுனி மேல் பனித்துளி!

கதிர்க் குழாயிட்டு
சூரியன் உறிஞ்சும் இளநீரோ
புல்நுனி மேல் பனித்துளி!

விடியற் குழந்தை அழுகிறது
அதைத் தாலாட்டி மண் மகிழ்கிறது
புல்நுனி மேல் பனித்துளி!

மண்ணுக்கு இத்தனை மார்ச்சளியா
ஒவ்வொரு விடியலும் மூக்கு சிந்துகிறதே
புல்நுனி மேல் பனித்துளி!

ஆறாத வடுக்கள்

காடுகள் இருந்த மண்ணில்
ஆறாத வடுக்கள்
பூசி மழுப்பிய கான்க்ரீட்

வெட்டுண்ட மரங்களின்
வேதனை என்னில்
ஆறாத வடுக்களாய்

மரணத்தை நோக்கி........

விட்டுப் போனது
இதயத்தின் இன்னொரு துடிப்பு
வெட்டுண்டது இன்னொரு மரம்

Tuesday, May 6, 2008

ஒருவனுக்கு ஒருத்தி

திரியை மணந்த சுடர்ப்பெண்
விட்டில்களைத் தண்டித்து போதிக்கிறாள்
ஒருவனுக்கு ஒருத்தி

நிழல்

ஒளியைத் தின்று
இருளைத் துப்புகிறதா
மரம்!

Monday, May 5, 2008

குளத்தில் கல்லெறிந்தேன்

குளத்தில் கல்லெறிந்தேன்
என் கைகளுக்கு விலங்குகளா
நீர் வளையங்கள்

குளத்தில் கல்லெறிந்தேன்
நீர்ப்பரப்பில் தெரிகிறது
கலங்கிய என் மனம்

குளத்தில் கல்லெறிந்தேன்
வரவிருக்கும் என் காதலிக்கு
இத்தனை வளையல்களா!

கல்லெறிந்த கணத்தில்
உயிர்தெழுந்தது
குளம்

கல்லெறிந்தேன்
கன்னமெங்கும் குழியக் குழியச் சிரித்தது
குளம்

குளத்தில் கல்லெறிந்தேன்
அணி வகுத்து நின்றன
சக்கரப் படைகள்

குளத்தில் கல்லெறிந்தேன்
அடுத்த கணமே
சக்கர வியூகம்

குளத்தில் கல்லெறிந்தேன்
இன்னா செய்தாரை ஒறுக்க
இத்தனைப் பெரிய பூவா!

கல்லெறிந்தேன்
சுரணையோடிருக்கிறேன் என்று
நரம்புகள் புடைத்து நின்றது குளம்

கல்லெறிந்தேன்
ஆறாத வடுக்களல்ல நீயேற்ற காயங்கள்
ஆறுதல் சொன்னது குளம்

குளத்தில் கல்லெறிந்தேன்
என் தலைக்குள் அலைபாயக்
கலங்கினேன் நான்

கடல்

மணலைக் குடித்துக் குடித்தும்
என்றுந் தன் தாகந் தணியாத
கடல்

கரையில் அலை வீசி
மணல் பிடிக்கும்
கடல்

உடுத்துவதாய் ஏமாற்றிக்
கரையின் தோலுரிக்கும்
கடல்

மணலைத் தின்று தின்று செரிக்காமல்
மீண்டும் மீண்டும் துப்பும்
கடல்

தான் துப்பிய எச்சிலைத்
தானே விழுங்கும்
கடல்

கரைச் செவிடன் காதில்
சங்கூதுகிறது
கடல்

கடற்கயவனின் தீராத காமப்பசி
காயப்பட்டும் கற்போடு தான் நிற்கிறாள்
கரைக்கன்னி

ஓய்வின்றி எப்போதும்
புணர்ந்து கொண்டிருக்கும் காமுகர்களோ
கடலுங் கரையும்!

கடலும் கரையும் புணர்கின்றன
வழியும் வியர்வையேந்தி வீசுகிறது
சில்லென்ற காற்று

உவர்மணலை உழுது உழுதும்
பயனின்றி வியர்க்கிறது
கடல்

தன் இருதய ஆழத்தில் கண்ணீர் முத்தை மறைத்து
அலை உதடுகளில் ஆரவாரச் சிரிப்போடு வருகிறது
கடல்

உள்ளே கண்ணீர் முத்து வெளியே சிரிக்கும் அலைகள்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்
கடல்

மரங்களின்றி...

முண்டமாய் மண் நின்றதால்
தலை துவட்ட வரவில்லை
மழை

பச்சைக் கொடி ஒன்று கூடப் பறக்கவில்லையே
எப்படிக் கடக்கும்
மழை இரயில்!

Saturday, May 3, 2008

சிவ-சக்தி ஐக்கியம்

நான்
சிவமென்னும் அவனாய்
ஆதார இருப்பாய் அடங்கி
சக்தியென்னும் அவளாய்
ஆதாரத்தினின்று ஆரவாரமாய் எழுந்து

அடங்கியே இருந்தால்
சூன்யம்

ஆரவாரமாய் எழுந்தால்
பிரபஞ்சம்

சூன்யமாம் அவனே
எண்ணக் குமிழிகளாம்
எண்ணற்ற முட்டைகளிட்டு
ஓடுகளைப் பிளந்து
பிரபஞ்சமென்னும்
வண்ணக் குமிழ்களாய்
அவளாய்
ஆர்ப்பரித்து எழுகிறான்

சிவ அருவத்தின்
சக்தி உருவாக்கமே
பிரபஞ்ச வண்ணம்

அவனும் அவளும்
பின்னிப் பிணைந்து
ஒன்றிக் கிடக்கும்
காமப் புணர்ச்சியின்
காதல் கனியாய்
நான்

அவனோடவளாய்
அவனில் ஓங்கியிருக்கும்
அவள்

அவளோடவனாய்
அவளில் அடங்கியிருக்கும்
அவன்

சரி நிகர் சமானமாய்
ஒத்தமர்ந்த
அவர்களின் இடைவெளியில்லா
ஒருமையின் உறுதியாய்
நான்

வண்ணக் குமிழ்களாய்
வெளிப்படும்
எண்ணக் குமிழிகளின்
யதார்த்தத்தில்
பொதிந்து கிடக்கிறேன்.

தமிழ் மன்றத்தில் ஆதவா அவர்களின் "அவளா? அவனா?" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

பாறை மேல் செடி

உடம்புக்கு வெளியே
துடிக்குமா
இருதயம்!

பிறந்த பின்னும்
முட்டையோடே ஒட்டியிருக்கும்
அதிசயக் குஞ்சு!

வழுக்குத் தலை மேல்
ஒரே ஒரு முடி!

புவி மிசை
இது வரை தோற்காத
உயிர்ப்பின் கட்சிக் கொடி!

பரிணாம மலையேற்றம்
வென்ற சிகரத்தில்
கொடியேற்றம்!

செடியின் வேரில்
பழுத்த பலா!

கல்லுக்குள் ஈரம்
சொல்ல நீளும்
நா!

உயிரற்ற பூஜ்ஜியம்
ஈன்ற
உயிருள்ள ஒன்று!

கல் நெஞ்சம் என்றால்
ஈரமுள்ள நெஞ்சம்!

மகாபலியின் தலை மீது
வாமனன் தாள்!

மண் மேல் மரம்
என்ற மரபைப்
புரட்டும் புதுக்கவிதை!

திறந்தது நெற்றிக் கண்
பறந்ததோ ஈரப் பொறி!

ஆணிலிருந்து
பெண்ணின்
ஜனனம்!

சூரியக் கதிரறுக்க
நீளும்
ஈர வாள்!

இயற்கை
எழுதிய
ஹைக்கூ!

ஜட மேற்கில்
உதித்த
உயிர்க் கிழக்கு!

இறுகிய மரபு இளகத்
தோன்றிய
புதுக்கவிதை!

இரத்த தானம்
மூளையிலிருந்து
இருதயத்துக்கு!

சூரியனைக்
குத்தும்
ஈர முள்!

மூளையின் மேலே
இருதயத்தின் ஆளுமை!

பாறைக்கும் இருதயமுண்டு
பாராங்கே
சிறு செடி!

ஒரே ஒரு மயிர்
பாறைக் கவரிக்கு
செடி தான் உயிர்

குருடென்றே நினைத்தேன்
செடியால் எனைப் பார்த்துக்
கண்ணடித்தது பாறை

செவிடென்றே நினைத்தேன்
செடியால் என் பேச்சை
செவி மடுத்தது பாறை

ஊமையென்றே நினைத்தேன்
செடியால் என்னோடு
நாவாடியது பாறை

முடமென்றே நினைத்தேன்
செடியால் எனை நோக்கிக்
கையசைத்தது பாறை

மூச்சற்றதென்றே நினைத்தேன்
செடியால் என் மூச்சுக்குக்
காற்றடித்தது பாறை

என்னிலிருந்து செடி உயிர்க்கிறது!
உன்னிலிருந்து கடவுள் ஏன் உயிர்க்கவில்லை?
மனிதனைக் கேட்கிறது பாறை.

வானைச் செதுக்கவா
செடி உளி நீட்டுகிறான்
பாறைச் சிற்பி!

பாறைக் கூடு விட்டு
செடிக் கூடு பாய்ந்ததோ
உயிர்!

ஜடப் பொருளென்றே நினைத்தேன்
தன் உச்சிப் பிளவில் செடி நீட்டி
என்னை மறுதலித்தது பாறை!

பாறை தானே உருவாக்கி
சூடிக் கொள்ளும் கிரீடமோ
செடி!

வான போதியின் கீழ்
பாறையின் ஞானோதயமோ
செடி!

என்னை மனிதனாய்ச் செதுக்க
செடி உளியோடு நீள்கிறதோ
பாறை!

சுரணையோடிருக்கிறேன்
பறைசாற்றுகிறதோ
செடி முளைத்த பாறை!

பொருள்முதல் வாதம்
நிரூபித்துக் காட்டுகிறதோ
செடி முளைத்த பாறை!

ஆண்மையே பெரிதென்று நினைத்தேன்
பெண்மையின் பெருமை சொன்னது
செடி முளைத்த பாறை!

மரணத்தைப் பொய்யாக்கி
வாழ்வை மெய்ப்பிக்கும்
செடி முளைத்த பாறை!

அருளற்றவனைக் கன்னெஞ்சனென்றேன்
தன்னெஞ்சைப் பிளந்துள்ளே ஈரங்காட்டி
என்னை மறுதலித்தது
செடி முளைத்த பாறை!

கொல்லும் ஆயுதமெடுத்தேன்
அகிம்சா மூர்த்தியாய்
என் முன்னெழுந்தது
செடி முளைத்த பாறை!

ஈரடித் திருக்குறளாய்க்
கண் கூடாக அறம் போதிக்கும்
செடி முளைத்த பாறை!

Friday, May 2, 2008

மலையுச்சி நோக்கி

என்னோடு
வருபவர்
எவருமில்லை

என்னை
வழியனுப்பவும்
எவருமில்லை

நான்
பயணப்பட்டுவிட்ட
பாதையின் பயங்கரம் பற்றி
எல்லோரும்
எவ்வளவோ
எடுத்துச் சொல்லியும்
துணிந்துவிட்ட என்னை
இனியும்
ஆதரிப்பாரும்
எவருமில்லை

கோடரிகளும்
கன்னெஞ்சங்களும்
மலிந்திருந்தும்
தன் விசுவரூபத்தோடு
தைரியமாக
எழுந்து நிற்கும்
அந்தப் பெரிய விருட்சத்தைத் தவிர
என் உணர்வுகளைப்
பகிர்ந்து கொள்ளவும்
எவருமில்லை

வீரிய மண்ணுக்குள்
விழுந்த சிறு விதை
தன்னந்தனியாக
எந்தத் துணையுமின்றி
இந்த பெரிய பூமியைப்
பிளந்து
முளை விடுவதைப் போல
என்னாலும் முடியுமா?!

பசிய இலைகளும்
சிவந்த மலர்களும்
பழுத்த கனிகளும்
சிறு விதையால்
சாதிக்க முடிந்ததை
வரி வடிவில்
விவரிக்கக்
கிளைகளில் பறவைகள்
என் மன இருள்
விடிய
சுப்ரபாதம் பாடுகின்றன

எல்லாக் கவலைகளையும்
அச்சங்களையும்
ஐயங்களையுந்
துறந்து
பயணப்பட்டு விட்ட
பாதையில்
புதுத் தெம்போடு
நான்
தொடர்கிறேன்

அதோ
அதோ
தூரத்தில்
மலையுச்சி
தெரிகிறது

நாசி நுனியை
அதன் வாசந்
தொடுகிறது

Thursday, May 1, 2008

நரக நகரத்தில்

என் வீட்டுக் கிணற்றருகில்
நீர் தேங்கிய
சிறு சிறு பள்ளங்களில்
குளித்துக் கும்மாளமடிக்கும்
சிட்டுக் குருவிகள்

என் மாணவப் பருவத்தின்
அந்த இனிய நாட்கள்
சிட்டுக் குருவிகளோடு
பறந்து விட்டன

இன்றோ
வற்றி விட்டது
கிணறு

வரண்டு கிடக்கின்றன
பள்ளங்கள்

உள்ளங்கைகளைக்
குழித்து
நீர் தேக்கிக்
கிணற்றருகே
சிட்டுக் குருவிகளுக்காகக்
காத்திருக்கிறேன்

விரல் இடைவெளிகளில்
நீர் வழிந்து கொண்டிருக்க
இனிய நாட்களின்
ஒரு கணங் கூடத்
திரும்பவே இல்லை

உள்ளங்கைகளும்
வற்றி உலர்ந்து விட
கான்க்ரீட் காடுகளுக்கு
எருவாகும் சருகாய்
நரக நகரத்தில்
விழுகிறேன்