Thursday, June 26, 2008

இருதயங் கனிந்தால்...

இருதயங் கனிந்தால்
இதயம் மெய்க்குள்
கற்கண்டாய் இனிக்கும்
மூளையின் மடல்களில்
ஊறும் அமுதால்
வரண்ட நா
தித்திப்பால் நனையும்
சத்திப் பால்
தொண்டைக்குள் இறங்க
தாகமெல்லாந் தணியும்
உடற்றும்
வயிற்றுப் பசி தீரும்
கொடுங்காமக் கனல் உருக
ஆருயிர்
அருங்காதல் வழிப்படும்
அருட்கனலின் கதகதப்பில்
மெய்யெலாங் குளிரும்
பொய்ச் சாக்காடு தொலைந்து
மெய் மெய்யாய்த் துலங்கும்

இருதயங் கனியுமா?
வள்ளலே!
நீரே கதியென்று
உம்மைச் சரண் புகுந்தேன்
பெருந்தயவாய் இருக்கும்
அருட்செம்மல் நீர்
என் இருதயங் கனிய வைக்குந்
தந்திரஞ் செய்ய அறியீரோ!
வெள்ளை மன வள்ளல் நீர்
கள்ள மனக் குள்ளன் எனைக்
கடைத்தேற்ற அறியீரோ!
"இரு தயவாய்!"
என்று
என் இருதய வாய் திறக்கும்
திருமந்திரஞ் சொன்னீர்!
வள்ளலே!
அன்பின் விதை தூவி
வன்பின் பாலையாம் என்னை
அருட்சோலையாக்கும்
உம் திருச்சித்தம்
சிரமேற்கொண்டு
காத்திருக்கிறேன்

இருதயங் கனியுங் கணம்
வாய்க்காமலா போகும்!
பெருந்தயவாய் இருக்கும்
அருட்செம்மல்
உம் திருச்சித்தம்
நிறைவேறாமலா போகும்!
சவமாய்க் குழிக்குள் வீழுமுன்
என் அவமெலாம் நீக்கி
நற்றவ நெறியில்
என்னை நிறுத்தி
என் இருதயங் கனிய வைக்க
வள்ளல் உம் ஒருவரால் தான் முடியும்!
எனவே
நீரே கதியென்று
உம்மையே சரண் புகுந்தேன்
உம் வெள்ளங்கியுள்
என் கள்ள மனம் அடங்கக்
காத்திருக்கிறேன்
ஐயனே!
என்னை ஆட்கொண்டருள்வீர்
இக்கணமே!
சவக்குழி என்னை விழுங்கு முன்னே
அருட்கனலாம் நீர்
என்னை விழுங்குவிரே!
என் இருதயங் கனிய வைப்பீரே!

Thursday, June 19, 2008

வண்ணத்துப் பூச்சி

1

அன்று
மண்ணில்
தொட முடிந்த
அருவருப்பென்று ஒதுக்கிய
கருமையின் நெளிவே
இன்று
விண்ணில்
தொட முடியாத
அழகின்
வண்ணச் சிரிப்பு

தன் மெய்யைக்
கருத்த தன் பரிமாணத்தில்
மறந்து
அன்று
அருவருப்பாய்
நெளிந்தது
நின்று
தன்னுள்ளே சென்று
செத்தது போல்
வெளியே கிடந்து
உள்ளே கடந்து
உள்ளுள்ளே
இன்னும் இன்னும் ஆழ்ந்து
தன் மெய் கண்டு
அதை நன்றாய் அறிந்துணர்ந்து
இன்று
பரிணாமப் பாய்ச்சலாய்ப்
பறந்து
அழகின் வண்ணக் கோலங்களைக்
கண் முன்னே காட்டி
போதிக்கிறது

"கருமையாய் மண்ணில் நெளிந்த
என் அருவருப்பை வெறுத்து
வெளி அழகில் அதை மறந்து
கால விரயம் செய்யாது
அவலமாய்த் தெரிந்த
என்னுள்ளே ஆழ்ந்து
அதில் புதைந்த
என் அழகை மீட்டு
விண்ணில் வண்ணக் கோலம் போட்டுப்
பறக்கிறேன்

மனிதா!
நீயும்
உள்ளதைக் கடந்து
உள்ளத்தைக் கடந்து
உள்ளே கட.
உனதுண்மை விளங்கி
உன்னை மீட்டு
என்னைப் போல்
பரிணாமப் பாய்ச்சலில்
நீயே
கடவுளாவாய்!
வெளி அழகில்
உன் உள் அழகைத் தொலைக்காமல்
கட உள்!
இன்றே
இப்போதே
இங்கேயே!"

கவிதை அருமை, வாழ்த்துக்கள் ஆதி.
வண்ணத்துப் பூச்சியின்
வண்ணங்கள்
உம் பார்வைகளில் ஒட்டியதைப் போலவே
அதன் போதனை
உம் மனத்தில் ஒட்டினால்
கவிதையில் குறையிருக்காது
இது நிச்சயம் ஆதி.

வண்ணத்துப் பூச்சியின்
வண்ணங்களாம்
வெளி அழகில் மயங்கி
உம் உள் அழகைத் தொலைக்காமல்
"கட உள்
இன்றே
இப்போதே
இங்கேயே!"

2

"ஆதி!
விரலுக்கு அகப்படும்
இப்போதிருக்கும்
மனிதமென்னும்
உம் அவல நிலையே
விரலுக்கு அகப்படாத
கடவுட் பெருநிலைக்கு
மூலப் பொருள்.
அவல நிலையாய்த் தெரியும்
அதனுள்ளே கடந்து
உம் உள்ளுள்ளே
இன்னும் இன்னும் ஆழ்வீர்
கடவுட் பெருநிலை
வெளிப்படும்"

நீவிர்
கவிதையில் பிடித்த
வண்ணத்துப் பூச்சிக்கு
உம் மீதுள்ள அக்கறையால்
தன் போதனையை
மீண்டும் வலியுறுத்துகிறது.

"என்னைப் பிடிக்கிறது
என் போதனை பிடிக்கிறதா
ஆதி"
கேட்கிறதோ வண்ணத்துப் பூச்சி!

"என் போதனை பிடித்தால்
என்னைப் பிடிக்கலாம்"
சொல்கிறதோ பட்டாம்பூச்சி!

3

"கருத்த
அருவருப்பாய்த் தெரியும்
என் அசுத்த தேகத்துக்காக
கடவுளையோ
வேறெவரையோ
நான் குறை கூறவில்லை.
மண்ணில் நெளிவதே என் விதி
என்று
உளம் நொந்து
உடல் நலிந்து
செத்து விடவும் இல்லை.
உள்ளதாய்த் தெரியும்
என் அசுத்த தேகத்தைக் கடந்து
உள்ளதை உள்ளபடித்
தெள்ளத் தெளிவாய்க் காட்டாத
மாயக் கள்ளனாம் உள்ளத்தைக் கடந்து
என் உள்ளே கடந்து
உள்ளுள்ளே ஆழ்ந்து
அங்கே
உள்ளதை உள்ளபடித்
தெள்ளத் தெளிவாய்க் காட்டும்
சற்குருவைக் கண்டு
என் மெய்
நன்றாய் அறிந்துணர்ந்து
என்னை மீட்டு
என் சுத்த தேகத்தை என் மேல் மாட்டிப்
பறக்கிறேன்
அழகின் சிரிப்பாய்
வண்ணக் கோலங்கள்
விண்ணில் போட்டு

உள்ளே கடந்து
உள்ளுள்ளே ஆழ ஆழ
வெளியில் மாற்றம்
வெளிப்படும் உண்மையை
உணர்த்தும் என் சரிதம்
உனக்குப் புரிகிறதா
ஆதி

கண்கூடாக
நான்
கம்பளிப் புழுவாய்
நெளிந்ததைக் கண்டாய்
கூட்டுப் புழுவாய்
என்னுள்ளே
நான்
ஆழ்ந்த தியான நிலை
கண்டாயோ
நீ
ஆதி
கண் கூடாக
நான்
வண்ணத்துப் பூச்சியாய்ப்
பறப்பதைக்
கவிதையில் வியக்கிறாய்

பிறந்திறந்து உழலும்
உன் சழக்குச் சரீரத்துக்ககாக
கடவுளையோ
வேறெவரையோ
நோகாமல்
அவ்வசுத்த தேகங் கடந்து
உள்ளதை உள்ளபடித்
தெள்ளத் தெளிவாய்க் காட்டாத
மாயக் கள்ளனாம் உன் உள்ளத்தைக் கடந்து
உன் உள்ளே கடந்து
உள்ளுள்ளே ஆழ்ந்து
அங்கே
உள்ளதை உள்ளபடித்
தெள்ளத் தெளிவாய்க் காட்டும்
சற்குருவைக் கண்டு
உன் மெய்
நன்றாய் அறிந்துணர்ந்து
உன்னை மீட்டு
உன் சுத்த தேகத்தை உன் மேல் மாட்டிப்
பேரின்பப் பெருவாழ்வில்
நீ
நிலைபெற
இன்னும் தயக்கமேன்
ஆதி

என் சிறந்த மாணவன்
இராமலிங்கன் செய்ததை
நீயும் செய்து
சிறக்க மாட்டாயோ
ஆதி"

4

வெள்ளைச் சுவர் மேல் உறங்கும் வண்ணத்துப் பூச்சி
உயிரோவியத்தைக் கவிதையில் பிடிக்க
விழித்திருக்கும் நான்

தமிழ் மன்றத்தில் ஆதி அவர்களின் "வண்ணத்துப்பூச்சி" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

தேடல்

வெட்டவெளி
தான் உடுத்திய
அருளொளி ஆடையை
பாரபட்சமின்றி
எல்லாவற்றுக்கும் அளித்தது
"உலகத்துக்கு
நீ
வெளிச்சமாய் இருக்கிறாய்
"
என்று
தன்னைத் தான் விளங்கிய
உண்மையையும்
பகிர்ந்தது

பெற்றதை உடுத்து
பகிர்ந்ததை உண்டு
வெட்டவெளியில் வாழ்ந்தால்
தேட வேண்டாம்
எதையும்
ஆதியாம் நீ
ஆதி யாரென்று
கேட்கவும் வேண்டாம்

தேவையற்றதுகள் யாவையுங் களைந்து
உடுத்த வேண்டிய ஒன்றை
உவந்தே உடுத்து
நலங்கெடுக்கும் யாவையுங் கழிந்து
உண்ண வேண்டிய ஒன்றை
ருசித்து உண்
சுவர்களைக் கடந்த
சுதந்திர வீட்டில்
சுயமாய் வாழ்
ஆதியுன் மெய்ப்பொருள் விளங்கி
அந்தமின்றி இனிதே வளர்வாய்
ஆதி நீயே!

தேடல் அருமை
தேடியது கிடைத்த பின்
வேறெது வேண்டும்

என்ன தேடுகிறாய்
கிடைக்குமா அது
தேடும் நீயே புதையல்

என்ன கேட்கிறாய்
கிடைக்குமா பதில்
கேட்கும் நீயே பதில்

அணைத்து விடு விளக்கை
அஞ்சாதே இருளுக்கு
நீ தான் ஒளி

என்ன வேண்டும்
இன்னும்
நீ தான் பூரணம்

வேறெதற்குக் கோயில்
வேறெதற்குச் சடங்கு
நீ தான் கடவுள்

சும்மா இரு சொல்லற
மௌனம் பேசும் மெய்யின்
தெற்றென விளங்கும் பொருளே நீ தான்

நான் என்ற தன்மையாம்
தன் மெய்யாம் தன் ஐ தன்னை
நன்றே உணர்ந்தால்
உண்டே உனக்கு ஏகார உறுதி

ஆதியந்தமில்லா ஆதியை
ஆதிக்கு உணர்த்தும் மந்திரம்
"நானே ஆதி"

அந்தமின்றி என்றும் எங்கும் வளரும் ஆதியின் பாதியை
ஆதிக்கு உணர்த்தும் மந்திரம்
"பகவன் நான்"

தமிழ் மன்றத்தில் ஆதி அவர்களின் "தேடல்" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை