Wednesday, April 30, 2008

எழுதா அதிசயம்

காற்று
என்னருகே
கொண்டு போட்டது
அழகிய
அச்செம்பூவின்
ஓரிதழை

நான்
கவிதை எழுதும்
நோட்டுப் புத்தகத்தின்
எழுதாத
இரு பக்கங்களுக்கிடையே
அவ்விதழைப்
பத்திரமாய்
வைத்தேன்

அதைப் பார்த்த
என் மனைவி
எதற்கென்று
கேட்டாள்

உலர
உலர
அழகு கூடும்
அதிசயங் காண
என்றேன்

அப்பக்கங்களில்
என் எழுத்து மழை
விழாதிருக்க
விரித்து வைத்த குடையாக
அவ்விதழ்
உலர்ந்து கொண்டிருக்கிறது
அழகு கூட
அழகு கூட

என் மனைவியிடம்
சொன்னேன்:
"நான்
எழுதிய
எந்தப் பக்கங்களையும்
நீ படிக்கா விட்டாலும்
எழுதாத
இவ்விரு பக்கங்களைக்
கண்டிப்பாகப்
படி
அடிக்கடி
அடிக்கடி.
அவ்விதழில் தான்
என் எல்லா வார்த்தைகளின்
அர்த்தமும்
புதைந்திருக்கிறது.
ஒரு பக்கம் நீ
மறு பக்கம் நான்
இடையே
நம் மகளுக்குள்
நம் அர்த்தங்களெல்லாம்
புதைந்திருப்பதைப்
போன்று."

No comments:

Post a Comment

உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்