இந்த வாதை
உன் மரணவாயிலின் பாதையென்று
முடிவு கட்டியவர்
கட்டிலினருகே கண் கலங்கினர்.
நீ சிரித்தாய்.
"சிதையும் உடல் தான்
அதில் ஜீவன் இன்னும்
வாழும் போது
மரணத் தவமிருக்க
என் சிந்தனை சிதையவில்லை."
சினத்தோடு
நீ சிரித்தாய்.
ஞான போதையில்
ஞால நியதியை
நீ கேலி செய்த போது
பேதையென்று இரங்கியவர்
கல்லறைக் குடிகளாகிய பின்னும்
நீ வாழ்கிறாய்.
வாதை தொடர்ந்தும்
கலங்காது
நீ சிரிக்கிறாய்.
"சிதையும் உடல் தான்
அதில் ஜீவன் இன்னும்
வாழும் போது
மரணத் தவமிருக்க
என் சிந்தனை சிதையவில்லை."
சினத்தோடு
நீ சிரிக்கிறாய்.
எரியும் சிதைகளின் அருகும்
சவக்குழிகளின் சமீபத்தும்
வாழத் துணிந்த உன்னைச்
சாவு எப்படி நெருங்கும்!
பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்