Wednesday, July 9, 2008

விடிவது எப்போது?!

வந்து போகும் அர்த்தகனம்
சற்றும் அறியாது
வெந்து புதையும் அனர்த்தம்.
இதுவே வாழ்வெனும் மனப்பிரமையில்
மெய்யும் பிடிபடும்
பொய்ம்மரணப் பிடியுள்.

வாசிக்க அவகாசமில்லை வாசியை.

நாசித் துளைகள் உள்ளே கசியும்
அமுத உயிர்ப்பைப்
பூசிக்க மனமுமில்லை.

சிவா வசிக்கும் மெய்யை
நேசிக்க இருதயமில்லை.

"நாம் அச்சிவாயம்"
ஒப்ப விருப்பமின்றி
உதடுகள் முணுமுணுக்கும்
நமச்சிவாய மந்திரம்.

புழுவாய் நெளிந்தது
வண்ணக் கோலமாய்ப்
பிடிபடாது பறந்தது

இருண்ட மனித மிருகம்
அமர தேவமாய்
விடிவது எப்போது?!

No comments:

Post a Comment

உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்