Wednesday, January 7, 2009

1. அருட்தாய்(நவயுக உதயம்!)

பருப்பொருளில் உறங்கும் அருட்தாய் விழித்தாள்!

அருட்பொருளாய்த் தன்னை முழுதாய் அறிந்தாள்!

அரும்பொருளாம் பரம்பொருள் தன்னுள் உணர்ந்தாள்!

திருப்பொருளாய்த் தன்னை உலகோர்க் களித்தாள்!

(நம் தாள் தொட்டு அன்னை பூமியில் இறங்குது நவயுக உதயம் இன்று! இவ்வதிசயம் சொல்லுது இக்கணினித் தாள்! குரு வள்ளல் தம் தாள் நமக்குத் தந்தாரே! சிரம் முதல் தாள் வரை ஆறாதாரத்தே பூரணமாய் ஒன்றியதே நிராதார மேனிலை! என் கரங்களின் தாளாண்மையால்-தட்டச்சும் முயற்சி- தாள் பற்றியக் கவியேந்தி கணினி வெண் தாள் கருக்குது!)



மண்ணில் இறங்கிய விண்ணின் இரக்கம்

மண்ணைப் பொன்னாய் மாற்றுது இன்றே!

பெண்ணின் பெருமை உயிர்க்கும் உலகில்

ஆண்மை வணங்கும் தன்னுட் தாய்மை!



ஒளிவுருவம் தாளிறங்கிப் பூமியுள் பொழியும்!

ஒளிந்திருக்கும் மூவரையும் பாருள் காட்டும்!

தெளிந்திருக்கும் எழுபடிக்கீழ் தாய்மை விழிக்கும்!

துளிர்த்திருக்கும் நவயுகத்தின் வாய்மை விளங்கும்!



மெய்வழிச் சாலை தாள்கீழ் பூமிக்குள்

உய்ந்தருட் பாலை வார்த்தே தாயவளை

எழுப்பி இன்பம் சேர்த்தது! மாயாநிலை

தழுவி அன்னை விழித்தாள் நவயுகத்தில்!



பராபரத்தின் இரக்கம் தராதலத்துள் உய்ந்தது!

சிராதாரம் இறங்கி அறுபடியுங் கடந்து

பாருக்குள் புகுந்தது! வெள்ளங்கி உருவம்

ஆருக்கும் உரிமை யாம்நவயுகம் பிறந்தது!



மூலா தாரங் கடந்து அருண்ஞானப்

பாலாந் தாரை பூமியுட் புகுந்தேஅத்

தாயை எழுப்பி மருட்டும் திரிகுணமா

மாயை விலக்க நவயுக உதயம்!



தாமசத்தைக் கரைத்துச் சத்துள் சேர்த்து

ராஜசத்தைக் கரைத்து சித்துள் சேர்த்து

சத்துவத்தைக் கரைத்து இன்பில் சேர்த்து

சச்சிதானந் தபூமியைச் செய்தார் வள்ளலே!



சுத்த சிவம்அருட் சத்தி இவர்க்கே

பிள்ளை யான்"" என்னும் மூலவர்!

கால வெளியுள் உய்ந்தே அன்னை

பூமி எழுப்புந் தந்திர போதகர்!



சுத்த சிவமும் நல்லருட் சத்தியும்

மெய்க்குள் உய்ந்தே சற்குரு நாதரைப்

பெற்றனர்! மூலா தாரத் தேயவர்

உற்றதும் பூமியில் நவயுக உதயம்!



பராபரத் தந்தையும் பராபரை யாந்தாயும்

சிராதா ரத்திறங்கிப் பெற்றனர் பரம்பரமாம்

மெய்க்குருப் பிள்ளையார்! உற்றவர் அடிப்படியில்

உய்ந்தார் பூமியுள்!விடிந் ததே நவயுகம்!

No comments: