Wednesday, January 7, 2009

பெறு நீ!

உச்சியில் என் ஞான கங்கை!

நெற்றியில் என் தூய நோக்கு!

தொண்டையில் என் மந்திர வாக்கு!

இருதயத்தில் என் தவத்திரு பூமி!

நாபியில் என் சத்திய தரிசனம்!

நாபியடியில் பார் உன் அதிசயப் பரிமாற்றம்!

முதுகடியில் என் ஜோதி ஸ்வரூபம்!

காலடியில் பூமியைப் புரட்டும் என் திரு நடனம்!



பெறு நீ இன்று

என் ஏழ்நிலை மேன்மை!

எழு நீ உயிர்த்து

உன் எழுபடி மெய்யுள்!

இரு நீ உலகில்

வற்றாத என் தயவாய்!

இரு நீ உலகில்

உய்விக்கும் என் மெய்வழியாய்!

இரு நீ உலகில்

மாயா என் அன்புருவாய்!

இரு நீ உலகில்

தெருட்டும் என் அருளொளியாய்!



அறு நீ இன்று

உன் சிறுமை!

பெறு நீ இன்று

என் முழுமை!

உறு நீ இன்று

என் பெருமை!



உற்றறி உன் அங்கையுள்

சுடரும் என் செம்பொருள்!

உற்றுணர் உன் காலடியில்

சுழலும் என் சக்கரம்!



பெறு நீ இன்று

என்னை!

இனி நீ

நானே அன்றி

வேறில்லை!

ஐயமின்றி

நீ என் மெய்

அறிவாயே!

"ஐ யாம்" ஒருமையில்

மாயையாம் இருமையைக்

கரைப்பாயே!



"பெரும் ஆள்" என்னில்

"பெறும் ஆள்" நீ

உன்னைக் கரைப்பாயே!

"நானே!" எனும்

எல்லாந் தழுவிய முழுமையாம்

ஒருமையில் எழுவாயே!

சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க நவயுகமாய்

பூமியில் நீ விடிவாயே!

No comments: