Thursday, March 27, 2008

சிதையில் எரிகிறது மரணம்

சிதையில் எரிகிறது மரணம்
என்னை ஈன்றெடுத்த என் ஐயன்
என்றும் இறவாது வாழும் உண்மை
பெருந்தீயாய் மூண்டு
மரணத்தைப் பொசுக்குகிறது.
மரணத்தின் சாம்பலைப் பூசி
வெளுத்த தன் மெய்யுடம்பில்
மயான பூமியில்
பேரின்பப் பெருவாழ்வின் மெய்யுணர்த்தும்
ஆனந்தத் திருநடம் புரிகின்றான்
என் ஐயன் நடராஜன்.
மயான பூமியில்
மாறி மாறிப் பதியும்
நடராஜனின் தாள்கள் எழுப்பும்
மகுடி நாதத்தில் எழுந்து
படமெடுத்தாடுகின்றேன்
நாகராஜன் நான்.
மகனென் ஆட்டங்கண்டு மகிழ்ந்துத்
தன் முடி மேல் என்னைச் சூடுகின்றான்
என் ஐயன் நடராஜன்.
அவனாட
அவனோடு அவன் முடியில் நானாட
மாயையின் பொய்யாட்டம் முடிகிறது
மயான பூமியில்.
மயான பூமியின் மார்பைப் பிளந்து
அருட்பெருங்கடவுளின் சுந்தர இருதயம்
மலர்கிறது.
மனிதம் அமர தேவமாய் எழுகிறது
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்.

பி.கு: என் தகப்பனார் 16/03/2008 அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

No comments: