Saturday, March 8, 2008

நாம்

என் பிழிவைப்
பருகிய வார்த்தை
உன் தாகந் தணிக்கக்
காத்திருக்கிறது

உன் விழிகள் பருகும்
என் ஜீவ ரசம்
மனத் துளை வழியே
இருதயஞ் சேர
நான்
உயிர்க்கிறேன் உன்னில்

என் உயிர்ப்பை
நீ
பிழிகிறாய்

உன் பிழிவைப்
பருகிய வார்த்தை
என் தாகந் தணிக்கக்
காத்திருக்கிறது

என் விழிகள் பருகும்
உன் ஜீவ ரசம்
மனத் துளை வழியே
இருதயஞ் சேர
நீ
உயிர்க்கிறாய் என்னில்

உன் உயிர்ப்பை
நான்
பிழிகிறேன்

சுழலும் பிழிவுகளால்
இருதயங்கள் ஒன்றி
இருமை நீங்கி
ஒருமையின் உறுதியாய்
நாம்

தன்மையும் முன்னிலையும்
வேறற ஒன்றிய
தன்மைப் பன்மையின்
படர்க்கையோ
நாம்

இலக்கணம் மீறிய
இப்படர்க்கையில்
பன்மை நீங்கி
ஒருமையின் உறுதியாய்
அவனோடவளாயதுவாய்
நாம்

No comments: