Thursday, March 27, 2008

அடக்கம்

அடங்காமையால் ஆரிருள் உய்ந்த
என் மனம்
அன்பின் மிகுதியால்
நீ
என்னைத் தழுவிய கணத்தில்
உன் இருதயத்தில் அடங்கிப்
பேரருள் உய்ந்தது

உன்னிரு கரங்களினூடே
பேரருளாய் வழிகிறேன்
நான்

வழியும் பேரருளில்
ஆரிருள் கரைய
ஓழிகிறது மாயை

மகன் நீ
தந்தையெனக்கு
ஆற்றிய இந்நன்றி மறவா
நானும்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்
உன் தாயும்
வேறற ஒன்றியே
உன் இருதயத்தில்
அடங்கியிருக்கிறோம்

நீயும்
இருதயத்தில் மனமடங்கி
அருளுற்று வாழ
அம்மையோடப்பனாம்
நான்
உன்னை ஆசீர்வதிக்கிறேன்.

No comments: