Friday, December 19, 2008

4. இருதய பூமி

நிராதார இலிங்கம் ஆறாதார யோனிக்குள்
பராபரனே புகுத்தினான்! பீறிட்ட நாதவிந்து
தராதலத்தைப் புரட்டியே ஏற்றிய ஜோதிமலை
பராதயத் திரட்சியாய் மாற்றுதே பூமியை!

ஒரும் 'ஐ'யாய் அவமனைத்தும் அகத்தவத்தில் கரைத்து
வெறும் 'ஐ'யாய்ச் சிவமலையில் அமர்ந்திருக்க விரைந்து
வரும் ஐயா, தயவென்னும் மனவடக்கம்! மரணம்
அறும், ஐயன் குருவள்ளல் அருண்மொழியே சரணம்!

அம்மையும் அப்பனும் குருமகனும் அமர்ந்தனர்
இம்மையில் நம்இரு தயபூமியில்! தயவெனும்
செம்மையில் நம்மனங் கனிந்ததே! தம்போல்
நம்மையும் இக்கணம் மாற்றினார் வள்ளலே!

"இரு தயவாய்" என்னுமோர் இரத்தினச் சுருக்கமாய்
"இருதய வாய்" திறக்கும் குருமொழி அருளியே
அம்மையாய் அப்பனாய் குருமகத் திருவதாய்
இம்மையே இருதயம் அமர்ந்தார் வள்ளலே!

அடங்காப் பிடாரியாய் ஆர்ப்பரிக்கும் மனந்தான்
அடங்கவே பிரானவர் ஆட்கொண்டார் நம்மையே!
கடத்துளே பிரகாசமாய் ஆண்டவர்தம் இடமாய்ச்
சுடச்சுடப் பிறக்குதே தூயபூமியாம் இருதயம்!

மூவரும் ஒன்றினர் இருதய பூமியில்
யாவரும் அருந்தவே அமுத வாரியை!
போவதும் வருவதும் முடிந்த நித்திய
வாழ்வது தந்தவர் பரம வள்ளலே!

ஆறுக்கு அப்பால் ஓடும் அருளாறு!
ஆறுள்ளே தித்தித் தோடும் பாலாறு!
ஊறியுள்ளே வன்பின் சூடும் நீஆறு!
மாறியுள்ளே அன்பின் ரூபம் நீஆகு!

இருதய பூமியில் அருந்தவப் பயனாய்
அருட்பெருஞ் ஜோதியின் ஆனந்த நடனம்!
பராபர வள்ளல் தனிப்பெருங் கருணை
தராதலத் துள்ளே தயவாய் இருக்கும்!

பரஞானம் தூயநோக்கம் குருமந்திர அகதீட்சை
சிரந்தாண்டிப் பாயுமாற்றின் நிராதாரத் தரமெல்லாம்
சிரங்கீழேப் பாயுமாறுப் பராபரன்செய் யோகதந்திரம்
அரங்கேறும் தூயபூமி இருதயத்தே காண்குருபிரான்!

நிராமயன் நிர்மலன் பராபரன் வள்ளல்தாம்
தராதலம் இன்புற இற(ர)ங்கினார் இருதயத்தே!
மெய்யுளே ரகசிய வழியினைத் திறந்தவர்
மெய்தனில் மாயா நிலைதனை எழுப்பினார்!

அறுபடி மேலேறி எழும்உச்சி மீறி
உறுபடி மேம்பாலம் எட்டியதை முட்டி
எழுபடி மேல்ஜோதி கொட்டியதை முகந்து
விழும்படிக் கீழ்பூமி எங்குமருள் சேர்!

உருப்படியாய்ப் பராபர வள்ளலைப் பற்றி
உருப்படும்மெய் வழியில் உள்ளத்தை நாட்டி
குருமொழிநெய் வழியும் வெள்ளத்தை உண்டு
உருவொளியும் மாயா மெய்ந்நிலையைச் சேர்!

இல்லமாக்கி இருதய பூமியைத் திரித்துவ
வல்லமைதன் அருட்தல மாக்கிய அதிசயம்
வள்ளல்தம் குருமொழி யாலா னதே!மெய்
அள்ளட்டும் குருபரன் மாயா நிலை!

No comments: