Monday, August 4, 2008

பரிணாமப் பாய்ச்சல்

இருதய ஆழத்தில் ஊன்றிய
தெள்ளிய மன இதத்தொடு
மனிதமாய் எழு!


குனிதலும் குட்டலும்
எட்டி உதைத்தலும்
அதற்கு இசைதலும்
திட்டித் தீர்த்தலும்
அதைச் சகித்தலும்
சிதைத்தலும்
சிதைதலும்
பழி தீர்த்தலும்
பழி ஏற்றலுமாகிய
வன்பின்
இருண்ட இருமையிலிருந்து
விடுபட்டு
அன்பின்
தெருளாம் ஒருமைக்குள்
எழு!


இருள் சேர் இருவினையாய்
விதைக்கப் பட்டவைகளை
அருள் விளங்கும் அறிவால்
அறிவு இயக்கும் ஆற்றலால்
வேரோடு பிடுங்கி
பொருள் சேர் புகழ் புரியும்
இறைவனாய் எழு!


இருண்ட இருமைச் சுழலின்
மருட்டும் மாயைப் பொய்யை
சுடச்சுடச் சுடரும் ஒருமையாம்
அன்பறிவாற்றலால் பொசுக்கி
என்றும் அழியாத
மெய்யருட்சித்தனாய் எழு!


தமிழ் மன்றத்தில் எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி அவர்களின் "மானுட மனிதங்கள்" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

No comments: