Friday, May 2, 2008

மலையுச்சி நோக்கி

என்னோடு
வருபவர்
எவருமில்லை

என்னை
வழியனுப்பவும்
எவருமில்லை

நான்
பயணப்பட்டுவிட்ட
பாதையின் பயங்கரம் பற்றி
எல்லோரும்
எவ்வளவோ
எடுத்துச் சொல்லியும்
துணிந்துவிட்ட என்னை
இனியும்
ஆதரிப்பாரும்
எவருமில்லை

கோடரிகளும்
கன்னெஞ்சங்களும்
மலிந்திருந்தும்
தன் விசுவரூபத்தோடு
தைரியமாக
எழுந்து நிற்கும்
அந்தப் பெரிய விருட்சத்தைத் தவிர
என் உணர்வுகளைப்
பகிர்ந்து கொள்ளவும்
எவருமில்லை

வீரிய மண்ணுக்குள்
விழுந்த சிறு விதை
தன்னந்தனியாக
எந்தத் துணையுமின்றி
இந்த பெரிய பூமியைப்
பிளந்து
முளை விடுவதைப் போல
என்னாலும் முடியுமா?!

பசிய இலைகளும்
சிவந்த மலர்களும்
பழுத்த கனிகளும்
சிறு விதையால்
சாதிக்க முடிந்ததை
வரி வடிவில்
விவரிக்கக்
கிளைகளில் பறவைகள்
என் மன இருள்
விடிய
சுப்ரபாதம் பாடுகின்றன

எல்லாக் கவலைகளையும்
அச்சங்களையும்
ஐயங்களையுந்
துறந்து
பயணப்பட்டு விட்ட
பாதையில்
புதுத் தெம்போடு
நான்
தொடர்கிறேன்

அதோ
அதோ
தூரத்தில்
மலையுச்சி
தெரிகிறது

நாசி நுனியை
அதன் வாசந்
தொடுகிறது

No comments: