Saturday, May 3, 2008

சிவ-சக்தி ஐக்கியம்

நான்
சிவமென்னும் அவனாய்
ஆதார இருப்பாய் அடங்கி
சக்தியென்னும் அவளாய்
ஆதாரத்தினின்று ஆரவாரமாய் எழுந்து

அடங்கியே இருந்தால்
சூன்யம்

ஆரவாரமாய் எழுந்தால்
பிரபஞ்சம்

சூன்யமாம் அவனே
எண்ணக் குமிழிகளாம்
எண்ணற்ற முட்டைகளிட்டு
ஓடுகளைப் பிளந்து
பிரபஞ்சமென்னும்
வண்ணக் குமிழ்களாய்
அவளாய்
ஆர்ப்பரித்து எழுகிறான்

சிவ அருவத்தின்
சக்தி உருவாக்கமே
பிரபஞ்ச வண்ணம்

அவனும் அவளும்
பின்னிப் பிணைந்து
ஒன்றிக் கிடக்கும்
காமப் புணர்ச்சியின்
காதல் கனியாய்
நான்

அவனோடவளாய்
அவனில் ஓங்கியிருக்கும்
அவள்

அவளோடவனாய்
அவளில் அடங்கியிருக்கும்
அவன்

சரி நிகர் சமானமாய்
ஒத்தமர்ந்த
அவர்களின் இடைவெளியில்லா
ஒருமையின் உறுதியாய்
நான்

வண்ணக் குமிழ்களாய்
வெளிப்படும்
எண்ணக் குமிழிகளின்
யதார்த்தத்தில்
பொதிந்து கிடக்கிறேன்.

தமிழ் மன்றத்தில் ஆதவா அவர்களின் "அவளா? அவனா?" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

No comments: