Monday, May 5, 2008

கடல்

மணலைக் குடித்துக் குடித்தும்
என்றுந் தன் தாகந் தணியாத
கடல்

கரையில் அலை வீசி
மணல் பிடிக்கும்
கடல்

உடுத்துவதாய் ஏமாற்றிக்
கரையின் தோலுரிக்கும்
கடல்

மணலைத் தின்று தின்று செரிக்காமல்
மீண்டும் மீண்டும் துப்பும்
கடல்

தான் துப்பிய எச்சிலைத்
தானே விழுங்கும்
கடல்

கரைச் செவிடன் காதில்
சங்கூதுகிறது
கடல்

கடற்கயவனின் தீராத காமப்பசி
காயப்பட்டும் கற்போடு தான் நிற்கிறாள்
கரைக்கன்னி

ஓய்வின்றி எப்போதும்
புணர்ந்து கொண்டிருக்கும் காமுகர்களோ
கடலுங் கரையும்!

கடலும் கரையும் புணர்கின்றன
வழியும் வியர்வையேந்தி வீசுகிறது
சில்லென்ற காற்று

உவர்மணலை உழுது உழுதும்
பயனின்றி வியர்க்கிறது
கடல்

தன் இருதய ஆழத்தில் கண்ணீர் முத்தை மறைத்து
அலை உதடுகளில் ஆரவாரச் சிரிப்போடு வருகிறது
கடல்

உள்ளே கண்ணீர் முத்து வெளியே சிரிக்கும் அலைகள்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்
கடல்

No comments: