Thursday, May 1, 2008

நரக நகரத்தில்

என் வீட்டுக் கிணற்றருகில்
நீர் தேங்கிய
சிறு சிறு பள்ளங்களில்
குளித்துக் கும்மாளமடிக்கும்
சிட்டுக் குருவிகள்

என் மாணவப் பருவத்தின்
அந்த இனிய நாட்கள்
சிட்டுக் குருவிகளோடு
பறந்து விட்டன

இன்றோ
வற்றி விட்டது
கிணறு

வரண்டு கிடக்கின்றன
பள்ளங்கள்

உள்ளங்கைகளைக்
குழித்து
நீர் தேக்கிக்
கிணற்றருகே
சிட்டுக் குருவிகளுக்காகக்
காத்திருக்கிறேன்

விரல் இடைவெளிகளில்
நீர் வழிந்து கொண்டிருக்க
இனிய நாட்களின்
ஒரு கணங் கூடத்
திரும்பவே இல்லை

உள்ளங்கைகளும்
வற்றி உலர்ந்து விட
கான்க்ரீட் காடுகளுக்கு
எருவாகும் சருகாய்
நரக நகரத்தில்
விழுகிறேன்

No comments: