Monday, May 5, 2008

குளத்தில் கல்லெறிந்தேன்

குளத்தில் கல்லெறிந்தேன்
என் கைகளுக்கு விலங்குகளா
நீர் வளையங்கள்

குளத்தில் கல்லெறிந்தேன்
நீர்ப்பரப்பில் தெரிகிறது
கலங்கிய என் மனம்

குளத்தில் கல்லெறிந்தேன்
வரவிருக்கும் என் காதலிக்கு
இத்தனை வளையல்களா!

கல்லெறிந்த கணத்தில்
உயிர்தெழுந்தது
குளம்

கல்லெறிந்தேன்
கன்னமெங்கும் குழியக் குழியச் சிரித்தது
குளம்

குளத்தில் கல்லெறிந்தேன்
அணி வகுத்து நின்றன
சக்கரப் படைகள்

குளத்தில் கல்லெறிந்தேன்
அடுத்த கணமே
சக்கர வியூகம்

குளத்தில் கல்லெறிந்தேன்
இன்னா செய்தாரை ஒறுக்க
இத்தனைப் பெரிய பூவா!

கல்லெறிந்தேன்
சுரணையோடிருக்கிறேன் என்று
நரம்புகள் புடைத்து நின்றது குளம்

கல்லெறிந்தேன்
ஆறாத வடுக்களல்ல நீயேற்ற காயங்கள்
ஆறுதல் சொன்னது குளம்

குளத்தில் கல்லெறிந்தேன்
என் தலைக்குள் அலைபாயக்
கலங்கினேன் நான்

No comments: