Tuesday, May 13, 2008

வியர்வைத் துளிகள்

விடியலின்
ஈர விதைகள்

கனவுப் படகுகளை
யதார்த்தக் கரை
சேர்க்கும் நதிகள்

முயற்சிக்கும்
முன்னேற்றத்திற்கும்
இடையே உள்ள தூரம்

வாழ்க்கை என்னும்
கவிதை எழுத
மெய்
தன்னிலிருந்தே
தயாரிக்கும்
மை

உழைப்பு உளி
உடம்பைச் செதுக்கும் போது
சிதறும் சில்லுகள்

வசந்தப் புரட்சியை
வரவழைக்க
உதித்த
ஒரே புள்ளி கொண்ட
ஆய்த எழுத்துகள்

உடம்பு வில்
உழைப்பில் வளையும் போது
சோம்பலைக் கொல்லும்
அம்புகளைத்
தானே
தயாரித்துக் கொள்கிறது

உயிரின் முடக்கத்துக்கு
உடம்பு இடும்
முற்றுப் புள்ளிகள்

உழைப்புச் சூட்டில்
உடம்பு உலை
உற்பத்தி செய்யும்
நீர்த் துளிகள்

No comments: