Friday, January 21, 2011

கட!உள் - 3

பழம்பெருங் கடவுளே நவமான புதியவன்
பழமென இனிப்பான் கட!உள்

கட!உள் மந்திர ஆணை ஏற்றே
கடவுளும் கடக்கிறான் உள்ளுள்

இதுவல அதுவல கடவுள் உதுபல
இதுக்களின் அதுக்களின் ஆதி
(உது = தமிழுக்கே உரித்தான மெய்ஞ்ஞானச் சுட்டு)

இதுவென அதுவென இறுகும் ஆணவம்
உதுவெனும் நடுநிலை ஆண்டவம்

நாகக் கண்ணாடியால் நானது பார்த்தால்
நாக வண்ணத்ததாய்த் தெரியும்
(நாகம் என்ற ஒரு வித வண்ண மூக்குக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு, நான் என்பதைப் பார்த்தால், நாக வண்ணத்ததாகவே "நான்" உனக்குப் புலப்படும்)

நாகக் கண்ணாடி கழற்றிப் பார்த்தால்
நானார் தூய படிகம்

அஞ்ஞானத் திருக்கும் நாகம் பேசும்
மெய்ஞ்ஞானம் எதற்கு நினக்கு

நெஞ்சுள் ளிருக்கும் நாதன் பேசும்
மெய்ஞ்ஞா னங்கேள்! கட!உள்

இங்குளான் அங்குளான் என்றே ஏய்ப்பார்
உங்குளான் நெஞ்சுளே கடவுள்(கட!உள்)

கடந்தால் உள்ளே நானார் யாமென
விரியும் ஒப்பில் அனகம்
(ஒப்பில் அனகம் = ஒப்பிட முடியாத அகம் புறம் என்று பிரித்திட முடியா அனகம் என்னும் அத்துவிதம், அத்வைதம்)

No comments: