Thursday, January 27, 2011

இருதய சமரசம்!

அசையா மௌனத்தின் ஆழத்திலிருந்து
அதிரும் சமரச நாத ஒளி
அவியா உயிர்ப்பாய்
அசையும் மெய்க்குள்!
வையத்துள் வாழ்வாங்கு வாழ அமுத
வெள்ளமாய் வழியும் உயிர்ப்பில் ஊறு!
தெய்வ திடமாய் உலகில் ஓங்கு!
உய்யும் வீடு பேறு
மெய்க்குள் இருக்க
இட்டும் சுட்டும்
நட்டமாகா உயிரை
ஒன்ற விடு மெய்க்குள்
இங்கே இக்கணம்!
பிறப்பும் இறப்பும் தொட முடியாப்
பெருவாழ்வு
அங்கையில் செம்பொருளாய்க்
குந்திக் கிடப்பதை
உற்றுணர வாசிப்பாய்
இருதய சமரசம்!
மூச்சில் இழைந்தோடும்
அவியா உயிர்ப்பதைக்
கவனிக்க இல்லையோ
மனிதா
நினக்கு அவகாசம்!
அருமருந்ததனை அருந்தாமல்
நோயில் தேய்வதன்றோ
மனிதா
நினக்கு அவமானம்!
அரிய பிறப்பின்
அவதார நோக்கம்
அறிந்தே தெய்வமாய்
அவனியில் எழுக நீ!
எழுந்தே
இருதய சமரசத்தின்
இனிய போதத்தை
இகத்தில் பகிர்ந்தே
இருப்பாய் நீ தயவாய்!

No comments: