Sunday, February 10, 2008

கவிதைக் கரு

காகிதத்தில்
கவிழும் என் எண்ணங்களில்
கவிதைக் கரு
கிடைக்குமா?

கிறுக்கனின்
கிறுக்கல்களில்
ஒளிந்திருக்கும் கரு
வெளிச்சத்திற்கு வருமா?

பித்தனின்
பிதற்றுகளில்
பதுங்கியிருக்கும் கரு
புதுக்கவிதை தருமா?

காகித வெள்ளை இருளில்
கரு வரிகளின் வெளிச்சம்
கருவைக் காட்டுமா?

உணர்வுச் சூட்டில்
எண்ணங்கள் உருகி
விரல் வழி ஓடிப்
பரவும் சொற்பெருக்கில்
என்னைத் தொலைத்து
நான் தேடும்
கவிதைக் கரு.

எண்ணங்கள் தீர்ந்து
வெறும் இருப்பில்
திடீரென
மின்னும் அக்கருவைக்
கவிதையாக்க
மீள்கிறேன்
நான்.

No comments: