Friday, July 11, 2008

?

அறிவுக் கனல் பட்டு
முற்றுப்புள்ளி ஒன்று
தீப்பற்றி எரிகிறதா?

தன்னருகில் இருக்கும்
அறிவுக்கனி ஒன்றைத்
தின்ன வாருங்கள் என்று
படமெடுத்து நிற்கும்
வினா நாகம்
சவால் விடுகிறதா?

விடை மாணிக்கம் ஒன்றை
வினா நாகம்
உமிழ்ந்து விட்டதா?

கீழே புள்ளி வைக்கப்பட்டு
தமிழுக்குப் பெருமை சேர்க்கும்
பத்தொன்பதாவது மெய்யெழுத்தா?

உகரத்தை உடைத்த போது
உயிரின் துகள் ஒன்று
கீழே சிதற
உருவாகிய
அருந்தமிழின் பதின்மூன்றாவது
உயிரெழுத்தா?

மடமைக் களைகளை அறுப்பதற்கு
ஓர் அறிவாளுக்குச்
சக்கரம் முளைத்து விட்டதா?




புள்ளிக்கும் கொக்கிக்கும் இடையே
உள்ள இடைவெளியில்
பளிச்சிடும் பதிலைப் பாராயோ
நல் வாலைப்பெண்ணே!

முட்டையை உடைத்து
உடனே பறக்கும்
அதிசயக் குஞ்சோ
உன் அதிரடி பதில்?



முடிந்ததாய் நினைத்த அக்னிப் புள்ளி மேலே
பறக்கும் சூடான கேள்விப் பொறிகளோ நீ
வாலையாம் ஞானப் பெண்ணே?????????????




பெட்டிப் பாம்பாய் அவளை அடிமைத்தளைக்குள் அடைத்தனர்.
தளை தகர்த்து நாகம் போல் வீறு கொண்டெழுந்த அவளோ
வாலையெனும் ஞானப்பெண்?




பதிலைப் பிடிக்கக்
கொக்கியாய்ப் பறக்கும்
புள்ளி?

சிறு புள்ளியாய்த் தோன்றும் அறிவு
தான் விசாலமானதைப்
பரைசாற்றப் பறக்குங் கொடி?

பகுத்தறிவின்
தேசியக் கொடி?

கல்லறைப் புள்ளி மேல்
சாவுக்கு சவால் விடும்
சன்மார்க்கக் கொடியா?

பரவிந்து ஒளிப்புள்ளி மேலாடும்
பரநாத ஓங்காரத் தொனியா?

புருவ நடுப்புள்ளி மேலாடும்
நடராஜ நாகமா?

அணுவுள் நிறைந்த
அகண்ட வெளியா?



முற்றுப் புள்ளியின் மரண வாடையை
மாற்றிப் போட்டப் பரிணாமப் பாய்ச்சலாம்
கூற்றை வென்ற அமரத் தென்றலா?


மூலாதாரப் புள்ளி மேல் நிமிர்ந்த
முதுகுத் தண்டின் மேல்
சஹஸ்ரார வளைவோ!?


விளக்கம்



பத்மாசனத்தில்
அல்லது
சாதாரணமாக நீங்கள்
உட்கார்ந்திருக்கும் போது
பக்கவாட்டில் இருந்து பார்த்தால்
நீங்கள்
கேள்விக்குறி போல் தெரிவீர்கள்

முதுகுத் தண்டு கேள்விக்குறியின்
நேரான செங்குத்தான பாகத்தையும்
தலையும் தலையுச்சியும்
(தலையுச்சியே சஹஸ்ரார சக்கரம்
அதாவது ஆயிரம் இதழ்த் தாமரை)
அதன் வளைவான பாகத்தையும்
கீழுள்ள புள்ளி
நம் ஒவ்வொருவருள்ளும் இருக்கும்
நாம் நம் வாழ்நாளில்
விழிப்படையச் செய்ய வேண்டிய
குண்டலி நாகத்தையும்(Guru or Christ Potential)


குறிக்கின்றன.

வரைபடம் கீழே





மெய்ஞ்ஞானத்துக்குத் தவமிருக்கும்
யோகாசன முத்திரையோ?




பரவிந்து ஒளியால்
எப்போதுந் திறந்த
இருதய துவாரம் அறிந்து
உள்ளே நீளும் தயவெனும்
நேரான மெய்வழிச்சாலையில் நடந்து
முடிவில்
பரநாத வளைவில் சேராயோ?

'ஓம்' எனும் பிரணவ எழுத்தின்
இன்னொரு வடிவமோ?

மெய்ஞ்ஞானம் வளர்க்கும்
நற்றமிழின் இரண்டாவது
ஆய்த எழுத்தா?

சொற்புள்ளிக்குள்
பொதிந்திருக்கும்
விசாலப் பொருளா?

இனியும் பகுக்க இயலாதென்று நம்பிய
அணுத்துகளை விஞ்ஞானம் பிளந்த போது
எழுந்த அகண்ட சக்தியா?

மனிதச் சிறு புள்ளியைத் தாண்டி
எழும் விசாலக் கடவுளா?

மனங்குறுகிய சிறு வட்டந் தாண்டி
இருதய ஒருமையில் உயிரனைத்தும்
தன் குடைக் கீழ் அரவணைக்கும்
ஆன்ம நேயமா?

மெய்க்குண்டத்தில்
மூட்டிய
ஞான வேள்வித் தீயா?

சித்தார்த்த மனிதனை
புத்த தேவனாக்கிய
ஞான போதியா?

சிவப் பேரிருப்பிலிருந்து
எழும்
சக்திப் பேரியக்கமா?

விவேக வித்தின்
வளைவான விளைவாம்
அறிவுப் பயிரா?

No comments: