Tuesday, July 22, 2008

? (இன்னும்!!!)

மூலாதாரப் புள்ளியைக் குடைந்து
அதனுள்ளே புகுந்து
பரிணாமப் பாய்ச்சலிலே
அதையுந் தாண்டி
முதுகுத் தண்டில் செங்குத்தாய் எழுந்து
தலைக்குப் பின்னும் மேலும் முன்னும் வளைந்து
தலைக்குள்ளே சுழிந்து
முடியும் கேள்வி
உன்னைப் பற்றிய முடிவான
மெய்ஞ்ஞான உறுதியோ?

ஆறாதாரங் கடந்து
சுழி முனைக்குள் சுழலும்
நிராதார மேனிலையோ?

ஆறாதார மெய்ச் சிறுபுள்ளியிலும்
அதற்கப்பால்
அப்பாலுக்கப்பால் எல்லையின்றிப் படர்ந்த
நிராதார உயிர்நிலையோ?

ஐம்புலனும் மனமும் சிறுபுள்ளியாய் அடங்க
விரியும் இருதயத் தூவெளியோ?



நெற்றி திறந்து விந்து விளங்கி
உச்சி மலர்ந்து அமுதம் பொங்கி
பிடரி பிளந்து நாதம் தெளிந்து
தொண்டைக்குள் இறங்கி
மெய்க்குள் விழுந்து
உயிர்ப்பை அளிக்கும்
அமுதத் துளியோ?

உச்சி திறந்து
செவி விழி கடந்து
நெற்றியில் சுழிந்து
நாசியில் நெளிந்து
வாய்க்குள் நீண்டு
தொண்டையின் வழியே
மெய்க்குள் வீழும்
ஞான அளியோ?

கிறிஸ்துவாய் மாற்ற
இயேசுவின் தலை மேல்
இறங்கும் பரிசுத்த ஆவியோ?



உணர்வில் வன்பின் சிறுகூறு
உலகில் தீவிரமாதமாய்த்
தலைவிரித்தாடுகிறதோ?

உணர்வில் அன்பின் சிறுகூறு
உலகில் ஆன்மநேய ஒருமையாய்
மலராதோ?


இனியும் பகுக்க இயலாதென்று
திடமாய் எண்ணிய அணுத்துகளையும்
பிளந்த விஞ்ஞானம் சுட்டுவது
பகாப்பதமாய்க் கிடக்கும்
விசாலமான வெட்டவெளியின்
மெய்ஞ்ஞானமோ?

அணுகுண்டை வெடித்தும்
சிதறாத ஒருமையாம்
வெட்டவெளியே நீயென்ற
மெய்ஞ்ஞானம் வாய்த்து
சிறப்பாயோ ஞானப்பெண்ணே?



உருவப் புள்ளி
உள்ளே சுழிந்து
அருவ விரிவாய் ஆவதும்
அருவ விரிவு
வெளியே வழிந்து
உருவப் புள்ளி ஆவதும்
தெற்றென விளக்கும் கேள்வியே
உறுதியான உன் மெய்ஞ்ஞான பதிலோ
ஞானப் பெண்ணே?

இருண்டு கிடந்த பருப்பொருட் புள்ளி
உணர்வேறிப் பாய்ந்து
ஒன்று முதல் ஐந்து வரையிலான
உயிர்த்திரளாய் நீண்டு எழுந்து
தன்னிழலில்
தன்னினத்தோடு ஐந்தையும்
அரவணைக்கும் அருட்போதி நிழலாம்
மனித ஆறாய்ப்
பின்னும் மேலும் முன்னும் வளைந்துப்
பின் உள்ளே சுழிந்து
எழும் 'ஐ'யே(எழுமையே)
வெளியே வழியும்
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையோ?



காலமும் இடமும் பொருளுந்
தாண்டி
உள்ளே சுழிந்தால்
என்றென்றும் இருக்கும் பெருவாழ்வின் சுகமும்
எங்கெங்கும் விரியும் பரிசுத்த வெளியும்
சக்தியூற்றாய்ப் பெருகும் பரசிவ அருளும்
ஒருங்கே திரண்ட
நிராதார மேனிலை
ஆறாதார மெய்வழியே
வெளியே வழிந்தோடும்
சூக்குமம் உணர்த்தும்
மெய்ஞ்ஞான சூத்திரமோ?

உள்ளே சுழியும்
ஞான இருப்போ
வெளியே வழியும்
அன்பாம் இயல்பூ?

சுழிமுனை இருதயத்
தூவெளியோ
துடிக்கும் இதயச்
சிவப்பூ?

உள்ளே சுழிய மறந்த
அஞ்ஞானத்தால்
வெளியே தயவாய் வழிய
மறுக்குதோ
இருண்ட மனிதப் புள்ளி?

சுழிமுனை இருப்பது
எதற்குச் சித்தரே?
வழியும் தயவின்
வடிகாலாய் இருக்கவோ?

நிராதாரஞ் சுழிந்தது
எதற்குச் சித்தரே?
ஆறாதாரம் வழிந்து
மெய்செய அல்லவோ?

நான்மறை எதற்கு
மெய்ஞ்ஞான சித்தரே?
"நான்"மறை அஞ்ஞான
மாயை மாய்க்கவோ?

பரிபாஷை எதற்கு
பரமஞான சித்தரே?
பகிரங்கமாய்ப் பரமனைப்
பகரவே அல்லவோ?

கேள்வி எதற்கு
அகத்தீச சித்தரே?
பரநாத மந்திர
தீட்சை அளிக்கவோ?

வெள்ளங்கி எதற்கு
இராமலிங்க வள்ளலே?
கருத்த மனப்புள்ளியை
இருதயமாய் விரிக்கவோ?

இருதய வாய் திறக்கும்
வழியென்ன அடிகளே?
தயவாய் இருப்பதால்
திறக்குமது அல்லவோ?



காலம் இடம் பொருள்
கடந்து
கடவுளாய்ச் சுழியும்
பரமஞானமும்
எங்கும்
எதிலும்
எப்போதும்
நிறையும்
இறைவனாய் வழியும்
மெய்ஞ்ஞானமும்
உணர்த்தும்
மந்திர வடிவமோ?

சுழியும் வெட்டவெளி கண்டு
வழியும் அருளொளி உண்டு
சுகித்திருக்கப் புகட்டும்
சற்குரு வடிவமோ?

மாயத்திரை விலக
என்னுள்ளே ஓங்கும்
மெய்க்குரு வடிவமோ?

நானே என ஓம் சுழிய
நான் என அகம் வழிய
இருக்கிறேன் என ஞானானந்தம் மொழிய
"ஓம் அகம் தம் யாம்" என்றே
வழிகாட்டும் நபியோ?

No comments: