Friday, July 11, 2008

உப்பு

சூரியச் சிற்பி
கிரண உளியால்
கடலைச் செதுக்கி
மேகச் சிலைகள்
செய்யும் போது
சிதறும்
வெள்ளைச் சில்லுகள்

கடல் சிப்பியில்
சூரியத் தூசு
விழும் போது
உருவாகும்
வெண் முத்துகள்

சூரிய நெசவாளி
கடலைத்
தன் கிரணத் தறியிலிட்டு
வானத்துக்கும்
பூமிக்கும்
வெண் துகிலை
நெய்து தருகிறான்

கடலின்
திரவ உடம்பில் ஓடும்
திட வெள்ளை இரத்தம்

சூரியக் கவிஞன்
தன் கிரணப் பேனாக்களில்
கடலை
மையாக நிரப்பிக் கொண்டு
விண்ணிலும்
மண்ணிலும்
இரு வித வெள்ளைக் கவிதைகள்
எழுதுகிறான்
இவ்வெள்ளைக் கவிதைகள்
இல்லையென்றால்
மனித நாவுகள்
மரத்தே போய் விடும்

சூரிய ஒளி மதுவைக்
குடித்த கடல்
போதையில்
வானத்திலும்
பூமியிலும்
வெள்ளை எச்சிலைத் துப்புகிறது

ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும்
கடலின் நாவுகளைச்
சூரிய வாளால் அறுத்து
மனிதன்
தன் நாவுக்கு
ஒரு சுவை தருகிறான்

இந்தியனின் அடிமைச் சங்கிலியை
உடைக்கும் உளிகள்
இதிலிருந்து தான்
செய்யப்பட்டன

வெள்ளையனின் ஆதிக்கத்துக்குச்
சவாலாக
இந்தியன்
இந்த வெள்ளையனைச் செய்தான்

வெள்ளையராட்சியின் கல்லறை
இந்தியனால்
இந்த வெள்ளைக் கற்களாலேயே
கட்டப்ப்டடது

கடல் கூட்டிலிருந்து
இந்தியன் விடுவித்த
இந்த வெள்ளைப் புறாக்கள்
வெள்ளையனோடு
சமாதானம் பேச அல்ல
அவனைக் கொத்தப் புறப்பட்டன

கடலிலிருந்து
இந்த வெள்ளைக் கொடியைச் செய்த
இந்திய சுதந்திரப் போராட்டம்
வெள்ளையைப்
புரட்சியின் சின்னமாக்கும்
அதிசயம் செய்தது

இந்திய தேசியக் கொடி
இந்த வெள்ளைத் துணியிலிருந்து தான்
செய்யப்பட்டது

இந்த வெள்ளைப் பலகையில்
தியாகிகளின் குருதித் துளிகளால்
இந்திய சுதந்திரக் கவிதை எழுதப்பட்டது

No comments: