Wednesday, July 9, 2008

பரமானந்தம்

சஹஸ்ரார முடிவாம் உச்சித்தாமரை திறந்தது
மூலாதார முதலாம் குண்டலிநாகம் எழுந்தது
நிராதார மேனிலை ஆறாதாரம் புகுந்தது
பராபர அருணிலை மெய்வழிப் பாய்ந்தது
ஜெயராம இராஜ்ஜியம் பூமியில் மலர்ந்தது
பாரபட்சம் பாராப் பேரன்பே ஆண்டது

மன்றத்தில் விழித்தது பொன்றாத நெருப்பூ
குன்றின்மேல் வைத்தது போன்றதாம் சுடர்ப்பூ
கண்டத்துள் விழுந்தது தெள்ளமுதக் களிப்பூ
பண்டத்துள் எழுந்தது மெய்யென்னுஞ் சிலிர்ப்பூ
மாயத்திரை கிழிந்தது நெஞ்சின்மேல் ஒளிப்பூ
பேயாட்ட மனமடங்கி இருதயத்தில் இருப்பூ

இருதயவாய் திறந்தது நெஞ்சின்கீழ் கதிர்ப்பூ
திருக்கமலம் மலர்ந்தது நாபிக்குள் பூரிப்பூ
பெருந்தயவாய் விழுந்தது அருட்ஜோதி இறைப்பூ
அருட்கடவுள் எழுந்தது முதுகடியில் உயிர்ப்பூ
அருளாட்சி வென்றது நவயுகத்தின் படைப்பூ
ஒருமைக்குள் வந்தது பல்லுயிர்த்திரட் தொகுப்பூ

No comments: