Tuesday, July 22, 2008

உன் புதுப் பரிமாணம்

எந்நிகழ்வுகளாலும் உடையாத
உடைக்க முடியாத
நித்திய ஜீவனென்னும்
இன்ப உந்துதல்
உன் மூலம்

காலத்தின்
சூழ்நிலைகளின்
கைதி நீயென்று
உன் நிஜ நிலையைத்
தலை கீழாக்கும்
கண்மூடித்தனத்தை
உன் ஆன்ம ஒளியால்
கண்டு கொண்டு
நிகழ்வுகளின் எஜமானனாகு

விரல்களில் சிக்கிய பொருள்
அருவ அருளின் திட உருவமே
என்று மனம் உணர
பொருளின் ஊனம்
அருளில் கரையும்

அஃறிணைகளில் சலனமூட்டும்
அமுதக் காற்று
உயர்திணை உன்னை
ஏன்
இன்னும் உயிர்ப்பிக்கவில்லை?

அருவக் கடவுளின் கருவில்
உருவான அமரக் கவிதை
நீ.
உன்னை உச்சரித்தே
தன் மௌன ஆழத்தை
உணர்கிறான்
கடவுள்.
உன் நுனி நாக்கில்
நடனமிடும்
ஜீவனுள்ள வார்த்தையை
உச்சரிக்க
இன்னுமா தயக்கம்?
உன் மெய்யென்னும்
வெற்றுத் தாளில்
மனப் பேனா
பதியட்டும்
அவ்வார்த்தையின் தடம்

இடமும் காலமும்
முடித்த
பரிணாம முடிவில்
இடமும் காலமும் மீறி
நீ பாய்ந்தால் மட்டுமே
உருவாகும்
உன் புதுப் பரிமாணம்

எழுதாத ஞான தொனி
உன் இருதய குகையில் கேட்டு
ஆன்ம நேயனாம்
இறை தூதனாய்ப்
புத்தனாய்ப்
புது மறை எழுது

அலுவல் பளுக்களை உதறி
நீ
சும்மா இருந்த போது
உன்னில் கீறப்பட்டவைகளைப்
புரிந்து கொள்ளப்
பரிணாமப் பயணத்தின் முடிவில்
நீ
பாய வேண்டும்
வேறு பயணப் பாதையில்


தமிழ் மன்றத்தில் எஸ்.எம். சுனைத் ஹஸனீ அவர்களின் "போதி மரங்களும், ஹிரா குகைகளும்" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

No comments: