Tuesday, July 22, 2008

கவிதை

கருத்துக்கும்
சொல்லுக்கும்
இடையே
கீற்றப்படும்
நேர்க்கோடு

சொல் உடம்பெடுத்த
கருத்து உயிர்

உணர்வு வானில்
எழுத்து மின்னல்

வயிற்றுக்கு மேல்
மூளைக்கு ஏறிய
மனிதன்
இருதயத்தில் இறங்கிய
வரலாற்றுப் பயணம்

பகுத்தறிவுக்கும்
உள்ளுணர்வுக்கும்
இடையே
நடந்த போராட்டத்தில்
தெறித்த குருதித் துளிகள்

காலத்தை வெல்லப்
புறப்பட்ட
எழுத்து வீரர்களின்
அணிவகுப்பு

மனிதன்
தன்னைச் செதுக்கிய போது
சிதறிய
உடலுயிர்த் துகள்கள்

வயிற்றை மறந்த மனிதனின்
அறிவுப் பசி பரிமாறிய
சொற்சோறு

மனக் குரங்கின்
மனித பரிணாமம்

சொற் காதலியைப்
புணரும்
கருத்துக் காதலன்

கருத்தையும்
சொல்லையும்
அளக்கப் புறப்பட்ட
குறளடிகள்

மனிதனின் நெற்றிக் கண்

ஆறாவது அறிவின்
வரிவடிவம்

அழகின் தாய்மொழி

சுய தேடலின் சுவடு

கண்ணீர்
புன்னகை
கோபம்
காமம்
காதல்
என்ற வண்ணங்களால்
எழுதும் சித்திரம்

எண்ணங்களின்
சுருக்கெழுத்து

காயங்கள் தாமே
தயாரிக்கும் மருந்து

கண்ணீர்த் துளிகளில்
கருக் கொள்ளும்
கனல் பொறிகள்

எண்ணங்களின் இலையுதிர்காலம்
எழுத்து வசந்தமாகும்
அதிசய ஏற்பாடு

செவிகள்
விழிகள்
நாசி
நாவு
விரல்கள்
இவற்றை விதைத்து
கண்ணீர்
வியர்வை
குருதி
இவற்றைப் பாய்ச்சி
ஞானச் சூரிய ஒளியில்
வளரும் பயிர்

விரல்களின் வழியே
உயிரின் கசிவு

செவிகளின் வழியே
உயிரின் மீட்பு

விரல் துளைகளுள்ள
மெய்ப் புல்லாங்குழலில்
உயிரின் மூச்சுகள்
வாசிக்கும் மானுட கீதம்

உணர்வுகளின் போதையில்
எண்ணங்களின் உளறல்

No comments: