Saturday, April 5, 2008

மரணம்

மெய்ஞ்ஞானிகளால் மட்டுமே
அவிழ்க்க முடிந்த
மர்ம முடிச்சு

பிறந்தவர் எல்லோரும்
மேலாம் மெய்யுண்மையை மறந்ததால்
தாமே ஏற்றக் கட்டாய தண்டனை

எவருமே பொய்யை நிராகரிக்காமல்
ஏற்றுக் கொண்டதால்
வந்த இலவச அவலம்

பெருவாழ்வில் நாட்டமின்றேல்
கிடைப்பது இதுவே
வந்துவிட்டால் போவதொன்றே விதி
என்ற மனப் பிரமையின் சதி

திருடனாய் உள்ளுள்ளே ஒளிந்திருக்கும்
அருட்பெருங்கடவுள்
உள்ளிருந்தெழும் வரை
வருவான் எமனாம் இவ்வெளித் திருடன்

உயிர்மெய் ஒருமையுணர்ந்தால்
சரியும் பிணமில்லை
திரியும் பேயில்லை

இலங்கைப் பெண்ணாம் நல்லவளே!
இல்லென்றே உன் அங்கையில்
நெல்லிக் கனி போல் உள்ளதாம்
மேலாம் உண்மையினைப்
பேரின்பப் பெருவாழவை
நித்திய ஜீவனை

நல்ல பெண்ணாம் நீ மறந்ததாலே
இலம் கையென்றே உன்
வல்லமை அழிந்தே
மரணப் பொய்யன் கையில் மாட்டினாய்.
நல்லவளே! வல்லவளே!
நல்லிலங்கைப் பெண்ணே!

உனக்கே இவ்வுண்மை
உறைக்கவே
உன்னைக் கொத்தும்
நல்ல நாகம் நானே!

என் வாக்கில் நஞ்சிருந்தால்
என்னை மன்னிப்பாயே
நல்ல பெண்ணாம் நீயே!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "மரணம்" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை 

No comments: