Tuesday, April 8, 2008

அதிசயப் பரிமாற்றம்

தேடித் துடிக்கின்றேன்
உன்னை
நாடித் தவிக்கின்றேன்
நீ வேண்டும்
என்பதால்
உறக்கம் இன்றி
மெய் தேய்கின்றேன்

விதியுடன் போராடி
முயன்று பார்க்கின்றேன்
நம்பிக்கைத்
தோணியில்
உறுதியுடன் நகர்கின்றேன்
(மனிதம் கம்பளிப் பூச்சி போல் அருவருப்பாய் ஊர்கிறது)

வள்ளலே!
இகத்தில் இறைந்திருக்கும்
பர உண்மையாம்
நீயே கதியென்று
உன்னைச் சரணடைகின்றேன்

சலனமற்றிருக்க அறியா
என் மனத்தை
உன் இருதயத்தில்
சேர்க்கின்றேன்
(மனிதம் கூட்டுப் புழுவாய் தனக்குள்ளேயே ஆழ்தல்)

உச்சியைப் பிளந்து
உள்ளே நுழைந்து
மந்திர உறுதி
தருகின்றாய்.
பொய்யுடம்பை
மெய்யாக்கி
நடைப்பிணமாம் என்னை
உயிர்த்தெழச் செய்கின்றாய்.
என் மேலிரங்கி
எனக்குள் இறங்கி
மண்ணுடம்பைப்
பொன்னுடம்பாய்
மாற்றுகின்றாய்.
யந்திர வாழ்வில்
தம்மை மறந்த மனிதம்
தம்மை(தம் ) அறிந்துய்யத்
தந்திரந் தருகின்றாய்.
வாலைத் தாயின்
ஒளி வாக்கருளி
நவகவிதை அளிக்கின்றாய்.

என் கடன்
உன் பணி செய்து கிடப்பதே
என்றென் இருதயங் கனிய
இன்புற்றிருக்கிறேன்
வள்ளலே!
உன் அதிசய அன்பில்
திளைத்திருக்கும் பேறு
யாவருக்கும் அருள்வாயே!
(மனிதம் தேவமென்னும் பட்டாம் பூச்சியாய் அதிசயப் பரிமாற்றத்தை அடைதல்)


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "தனிமையோடு" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: