Wednesday, April 9, 2008

முடிந்தவனும் முயன்றவனும்

வருந்துயர் எண்ணி

அடுத்த அடி வைக்கத்

தவறியவன்.

எது வரினும்

என்னால் சாதிக்க முடியுமென்று

எடுத்த அடி நிறுத்தாது

தொடர்ந்தவன்................

முடங்கியவனுக்கு

போகம் செத்தது.

முயன்றவனுக்கு

சோகம் செத்தது.

மாயப் பிறந்தவனென்று

வாழப் பயந்தவன்

தேய்ந்தான்.

வாழப் பிறந்தவனென்று

மாயத் துணிந்தவன்

வளர்ந்தான்.

எட்ட முடியாதென்று

எண்ணஞ் சிதைந்து

மண்ணை நோக்கியவன்

மண்ணில் புதைந்தான்.

என்னால்

எட்ட முடியாதது

எதுவுமில்லை என்று

எண்ணஞ் சிறக்க

விண்ணை நோக்கியவன்

வீழ்ச்சியை வென்று

மண்ணிருந்து

மறுபடி எழுந்தான்.

முடியாதென்றவன்

முடிந்தான்.

முடியுமென்றவன்

முயன்றான்.

முடிந்தவன் மடிந்தான்.

முயன்றவன்

மனிதனாய்

மண்ணில் விடிந்தான்.


பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.

No comments: