Tuesday, April 8, 2008

நம் காதலின் சாட்சியாய்

கடவுட் காதலனே!
வன்பெனும் தரிசாய்க் கிடந்த
என் நெஞ்சை
உன் அன்பெனும் பரிசால்
நன்செய் நன்னிலமாய் மாற்றி
உன் ஒளியை விதைத்தாய்

நீ இட்ட விதை
இன்று போதி விருட்சமாய்
ஓங்கி ஒளிர்கிறது
என்னுள்

உன் மௌன ஆழத்தில்
என் உள்ளத்தின் உண்மையொளி கண்டு
அதைச் சுடச்சுடச் சுடரும்
நவகவிதையாக்கி
உன் மௌனத்தைப் பேசுகிறேன்

ஆயிரமாயிரம்
இரத்தினக் கற்களாம்
வார்த்தைகளின் புதையலாய்
விளங்கும் உன் மௌனம்
இன்று என் வாக்கினில்
பளிச்சிடுகிறது

உன் உள்ளே புதைந்து
மண்ணில் முளைத்துள்ளேன்
உன் ஜீவனின் சாட்சியாய்
விண்ணுள் ஓங்கி எழுகிறேன்

உன்னில் புதைந்த
என்னைத் துளைத்து
நீயன்றோ எழுகிறாய்
நம் காதலின் சாட்சியாய்


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "காதல் ஒன்றே சாட்சி..." கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: