Wednesday, April 9, 2008

இது

கனலின்
விதைகள் விழுந்து
இருண்ட பூமியின்
கதவுகள் திறந்து
முளைக்கும்
ஒளிக் குருத்து
இது.

மனவெளிகள்
இரவுகளைத் துறந்து
யதார்த்தப் பகல்களை
மேயத் தொடங்கும்
புதுயுக நிஜம்
இது.

இமைகளோடு
கனவுகளும் ஒதுங்க
விழிகள்
வழிகளைத் தேடும்
விழிப்புத் தவம்
இது.

சிறகுகள் இருந்தும்
இது வரை
சிறையின் உறவில்
வளர்ந்த சிந்தை
பூண்ட
சுதந்திரத் துறவு
இது.

பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.

No comments: