Wednesday, April 9, 2008

யாரம்மா நீ

யாரம்மா நீ அறி யாரம்மா நீ
பெண்ணம்மா நீ ஞானப்பெண்ணம்மா நீ
எண்ணம்மா நீ இதை எண்ணம்மா நீ

ஏனம்மா மதமுனக்கு ஏனம்மா
வீணம்மா அது உனக்கு வீணம்மா
பொய்யம்மா பிரிவினைகள் பொய்யம்மா
மெய்யம்மா மானுடந்தான் மெய்யம்மா

ஊரம்மா யாதுமுந்தன் ஊரம்மா
உறவம்மா யாருமுந்தன் உறவம்மா
பூங்குன்றன் சொன்னதை நீ கேளம்மா
தாக்கும்படை தாங்கும்பகை தள்ளம்மா
ஒற்றுமையால் ஓங்கும்வகை கொள்ளம்மா
சாடம்மா சாதியை நீ சாடம்மா
தேடம்மா சமத்துவம் நீ தேடம்மா

ஆணம்மா மற்றும்நல்ல பெண்ணம்மா
இருவர்க்கும் கற்புஇங்கு பொதுவம்மா
மாகவிஞன் பாரதியின் வாக்கம்மா
மானுடத்தைப் பேணும்நல்ல போக்கம்மா
பெண்ணடிமைத் தளைதன்னை நீக்கம்மா
பெண்கொடுமை செய்வோரைத் தாக்கம்மா

பெண்ணுரிமை பெண்வாழ்வின் மூச்சம்மா
அவ்வுரிமை போனாலுயிர் போச்சம்மா
நாண்அச்சம் என்றபழம் பேச்சம்மா
பெண்ணினவேர் அறுக்கும்வாள் வீச்சம்மா

பெண்என்றால் கருக்கலைக்கும் எண்ணமம்மா
மானுடத்தை உருக்குலைக்கும் திண்ணமம்மா
பெண்இன்றேல் ஆண்வர்க்கம் இல்லையம்மா
மானுடமே பெண்ஈன்ற பிள்ளையம்மா
பேதையென்று பெண்ணைச்சொல்வார் எத்தரம்மா
ஞானப்பெண்ணாய் உன்னைக்கொள்வார் சித்தரம்மா

பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை

No comments: