Sunday, April 27, 2008

வயிர உள உழுதலிலே

அழுத விழி
தொழுத கரம்
விழுந்த மதி
தளர்ந்த நடை
பழுது இவை.
வயிர உள உழுதலிலே
எழுச்சியுண்டு.

தோழனே!
விடிந்த விழி
வலிய கரம்
தெளிந்த மதி
மதர்த்த நடை
இவற்றொடு நீ
களத்தில் கருத்தொடு நில்.
வயிர உள உழுதலிலே
எழுச்சியுண்டு.

மாய அல்ல நீ
கருவின் இருளினின்று
வெளி வந்தாய்.
பரிதி சுற்றிச்
சறுக்கும் ஞாலத்தில்
கருத்தின் இருளறுத்துச்
சாவை வெல்ல
அரிதாய்ப் பிறந்தாய்.

வினவாமல்
விடைகளுண்டு.
தரங்கெட்ட இச்சமுகத்தில்
வினவுதற்குத்
தடைகளுண்டு.
சிந்தைச் சிதைவைப்
போற்றும்
பரமனின் படைகளுண்டு.
எண்ணங் கலங்கிய
எழுத்து நடைகளுண்டு.
பிரிவுகள் விற்கும்
சாத்திரக் கடைகளுண்டு.
ஞானம் பேசும்
காவி உடைகளுண்டு.
மனித உருவில்
மேயும் மாக்களுண்டு.
இந்த இருண்ட நிஜங்களின்
குருட்டுத் தாக்கல்
எதிர்த்து நீ
களத்தில் கருத்தொடு நில்.
வயிர உள உழுதலிலே
எழுச்சியுண்டு.

No comments: