Tuesday, April 29, 2008

அறுந்த மரத்தின் அடித்தண்டு

அங்கே அறுந்த மரத்தின் அடித்தண்டு
இங்கே இரத்தங் கசிகிறது
என்னெஞ்சு

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா அறுந்து கிடப்பது
உன் உடம்பென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
மனிதம் மிருகமாகக்
கழிந்ததொன்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
திறந்தது மண்ணின்
நெற்றிக் கண்ணொன்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா நீ அறுத்தது
அன்னை பூமியின் முலையொன்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
ஈரம் போன மண்ணில்
நெருப்பைக் கக்கும் வாயொன்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
மனிதத்தின் சவப்பெட்டியில்
இறங்கும் ஆணியொன்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா சுற்றி முளைக்கும் செடிகள்
உன்னை நியாயங் கேட்குதென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா அதுவுன்
உயிரைக் குடிக்கும் விஷ முள்ளென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
நன்றி கொன்றவன் நீயென்று
உன்னைச் சுட்டும் விரலொன்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா அதுவுன்
நெஞ்சில் ஆறாத வடுவென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா நீ களைந்தது
பூமித் தாயின் சேலையென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா நீ சிதைத்தது
பூமித் தாயின் மடியென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா அங்கே சிந்தியது
கழுவவே முடியாத இரத்தக் கரையென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
இரு கால் மிருகமே ஏன் விட்டுச் சென்றாய்
இங்கொரு மாமிசத் துண்டு

அறுந்த மரத்தின் அடித்தண்டு
ஈரமில்லா வன்னெஞ்சின்
வரண்ட துண்டு

அறுந்த மரத்தின் அடித்தண்டு
போதுமடா மனிதா நீ செய்த நாசம்
செய்வாய் இனி மரம் வளர்க்கும் தொண்டு

No comments: