Sunday, April 13, 2008

இரு தயவாய்!

வள்ளலே!
வெட்டவெளி வீட்டில்
வானக் கூரையின் கீழ்
உம் அருளொன்றே பொருளாய்
உம் வெள்ளங்கியே உடையாய்
உம் மெய்யே உடம்பாய்
உம் ஜீவனே மூச்சாய்
அறிந்த எல்லாம் விட்டு
எல்லாம் அறியும் அறிவைப் பற்றித்
தனை மறந்து மனமடங்கி
வெறும் “நான்” என்று காலியாகி
உம் வழியாய்
இவ்வுலகில் இனிதே இருக்க
இருதயங் கனியும்
நாள் எந்நாளோ!”
என்றே ஏங்கினேன்.

உடனே
அருகில் வந்து
இரு தயவாய்!”
என்றே
ஒரு மந்திர வார்த்தை முழங்கியே
என் இருதய வாய் திறந்து
அன்பின் ஊற்றாய்ப் பாய்கிறீர்.
இருமை நீக்கித்
தயவெனும் ஒருமை
வாய்க்கும் பெருமையாம் வாழ்வைத்
தந்த உம் வள்ளன்மைக்கு
எப்படிச் செய்வேன் கைம்மாறு!

“அன்பு மகனே!
நீ
ஒருமையை விட்டு
ஒரு கணமும் நழுவாமல்
எப்போதும்
தயவாய் இருப்பதே
எனக்குச் செய்யும் கைம்மாறு!”
என்றே நீர் உறுதியாய்ச் சொல்கிறீர்.

வன்பின் பாலையாம் என்னில்
அன்பெனும் தயவாய் இருப்பதும்
நீரேயன்றி நானோ!

திருஅருட் பிரகாசரே!
உம் வள்ளன்மைக்கு
உண்டோ ஈடு!

No comments: