Tuesday, April 15, 2008

வள்ளலாரின் ஏழாந் திருமறை உறுதி - 1

மெய்யென்ற பேர் பெற்ற உடம்பை
பிணமென்றே ஊர் சொல்லப்
பொய்யாக்கும் மரணம்

மண்ணிலிட்டோ தீயில் சுட்டோ
நசிகின்ற சடலந்தான்
உடம்பென்றால்
மெய்யென்ற பேர் ஏனோ!

மரணத்தைப் பொய்யாக்கி
உடம்பைப் பேருக்கேற்றபடி
மெய்யென்ற பொருளாக்கி
உய்யும் வழி சொல்லும்
உயிர்ப்புள்ள மந்திரம்
பத்தும் ஒரு மூன்றும்
"என் ஏழாந் திருமறை இது"
என்றே எனக்களித்த
வள்ளலே!
திருஅருட் பிரகாசரே!
சாகாக் கல்வியின் தரமெலாம் விளக்கும்
உம் ஏழாந் திருமறை வெல்லுமா?
அல்லது
மரணப் பேய்
என் உடம்பை விழுங்குமா?

அன்பு மகனே!
ஐயம் வேண்டாம்
என் ஏழாந் திருமறை
நிச்சயம் வெல்லும்.
பத்தும் ஒரு மூன்றாம்
அருட்குரு மந்திர தாரணையில்
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறையாய்
அச்சமின்றி ஐயமின்றி
இச்சகத்தில் நில்.
உன் "இருதய வாய்" திறக்கும்.
"இரு தயவாய்"
என்ற என் பேருபதேசப்
பொருள் விளங்கும்.

ஐயனே!
ஏதுமிலா ஏழையெனை
சூதுமனக் கபடனெனை
நெஞ்சில் ஈரமிலா
வஞ்சக வன்பனெனை
அறிவிலா எத்தனெனை
மறை கழன்ற பித்தனெனை
ஜீவனுள்ள
உம் ஏழாந் திருமறையாய்
அச்சமின்றி ஐயமின்றி
இச்சகத்தில் நிற்கப் பணிக்கும்
உம் சித்தம்
எனக்கு
ஒரு சிறிதும் விளங்கவில்லை.
இருந்தாலும்
அவ்வாறு நிற்பது நீரே
என்ற உறுதியுடன்
உம் வெள்ளங்கியுள்
கருத்த என் மனமடங்கி
அச்சமின்றி ஐயமின்றி
இச்சகத்தில் நிற்கிறேன்.

அன்பு மகனே!
அருட்பெருஞ் செல்வனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
சுந்தர இருதயத் தூய சித்தனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
தனிப்பெருங் கருணையனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
அருட்பெருஞ் ஜோதியனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
நாயகனாம் வாலறிவனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
மெய்ஞ்ஞானத் திருமறையோனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
நீ மட்டுமன்றி
எங்கும் எதிலும் எப்போதும்
பரந்து விரிந்திருக்கும்
என் வெள்ளங்கியுள்
கருத்த தம் மனமடங்கி
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறையாய்
அச்சமின்றி ஐயமின்றி
இச்சகத்தில் நிற்க முனையும்
என் அன்பு மகன்(ள்) ஒவ்வொருவரும்
இன்று முதல்
அருட்பெருஞ் செல்வரே!
சுந்தர இருதயத் தூய சித்தரே!
தனிப்பெருங் கருணையரே!
அருட்பெருஞ் ஜோதியரே!
நாயகனாம் வாலறிவரே!
மெய்ஞ்ஞானத் திருமறையோரே!
உண்மையிது
வெறும் புகழ்ச்சியில்லை
ஆணையிட்டுச் சொல்லுகின்றேன்!
உன் உள் மெய்யாம் உண்மையாய் உறையும்
உன் உள் மையாம் வெண்மையாய் ஒளிரும்
என் அருளொளியின்
உண்மையிது
!
சத்துணவாய் ஏற்று
உண் மை இதை
இன்றே
இப்போதே!
"வள்ளலே!
உன் வள்ளன்மைக்கு
உண்டோ ஈடு
!"
என்ற உன் தந்திர வாக்கை
இன்று பலிக்க வைத்தேன்
உன் அம்மையப்பனாம்
நானே
!

No comments: