Friday, April 25, 2008

புதுமை

இது வரை பார்த்தேயிராத
புதிய பறவைகள்
பறந்தன வானில்.
விஷயந்தேடி வந்தவனை
விரிந்த வானம்
வியப்பிலாழ்த்த
எண்ணக் கவணிலிருந்து
விடுபட்டன சொற்கள்.
சொற்களின் குறி தப்ப
வசப்படாது மறைந்தன
பறவைகள்.
விழுந்த சொற்களைப்
பொறுக்க
குனிந்த போது
இது வரை பார்த்தேயிராத
புதிய பூக்கள்
சிரித்தன மண்ணில்.
சொற்களையும் பொறுக்காமல்
பூக்களையும் பறிக்காமல்
எண்ணக் கவணைச்
சுழற்றிக் கொண்டே
மன வெளியில்
சும்மா நடந்தேன்.
இது வரை பதித்தேயிராத
புதிய சுவடுகள்
விழுந்தன தாளில்.

No comments: